தலையில் கல்லை போட்டு விவசாயி கொலை 2-வது மனைவியிடம் போலீசார் விசாரணை


தலையில் கல்லை போட்டு விவசாயி கொலை 2-வது மனைவியிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 7 March 2020 10:30 PM GMT (Updated: 7 March 2020 8:54 PM GMT)

தர்மபுரி அருகே ரெயில் தண்டவாளத்தில்பிணமாககிடந்தவிவசாயி சாவில் திடீர் திருப்பமாக அவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாகஅவருடைய 2-வது மனைவியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தர்மபுரி,

தர்மபுரியை அடுத்த செல்லியம்பட்டி அருகே உள்ள எஸ்.கொல்லப்பட்டியை சேர்ந்தவர் குப்பன் (வயது 43). விவசாயியான இவர் நேற்று முன்தினம் அந்த பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் தலையில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தர்மபுரி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இதில் திடீர் திருப்பமாக அவர் கள்ளக்காதல் விவகாரத்தில் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு உடலை ரெயில் தண்டவாளத்தில் வீசி சென்றதும், இந்த கொலை சம்பவம் நடப்பதற்கு முன்பு குப்பனுக்கும், அவருடைய 2-வது மனைவியான ராஜேஸ்வரி(33)க்கும் தகராறு ஏற்பட்டதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனால் ராஜேஸ்வரிக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டு உள்ளது.

2-வது மனைவியிடம் விசாரணை

இதுதொடர்பாக அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் குப்பனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் நேற்று மாலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுதொடர்பாக தர்மபுரி ரெயில்வே போலீசார் கூறுகையில், குப்பன் மர்மமான முறையில் இறந்தது தொடர்பான வழக்கு உரிய விசாரணையின் அடிப்படையில் கொலை வழக்காக மாற்றப்பட உள்ளது. இதில் தொடர்புடையவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வழக்கை மதிகோன்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உரிய விசாரணைக்கு பின்னரே இந்த கொலையில் யார், யாருக்கு தொடர்பு உள்ளது? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும் என்று தெரிவித்தனர்.

Next Story