ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்


ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்
x
தினத்தந்தி 8 March 2020 11:30 PM GMT (Updated: 8 March 2020 9:11 PM GMT)

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

பென்னாகரம்,

சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இதனிடையே கர்நாடக அணையில் இருந்து தமிழகத்திற்கு 2,500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஒகேனக்கல் ஐந்தருவி, மெயின் அருவில் தண்ணீர் கொட்டியது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறையத்தொடங்கியது.

இதனிடையே நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1,400 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளந்து கண்காணித்து வருகின்றனர். நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.

உற்சாக குளியல்

இந்தநிலையில் வாரவிடு முறையான நேற்று ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி மற்றும் காவிரி ஆற்றில் உற்சாகமாக குளித்தனர். பின்னர் அவர்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே மணல் திட்டு வரை காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

கோடை வெயில் கொளுத்தியதால் சுற்றுலா பயணிகள் இளநீர், குளிர்பானம், தர் பூசணி ஆகியவற்றை வாங்கி சாப்பிட்டு சூட்டை தணித்தனர். கூட்டம் அதிக அளவில் இருந்ததால் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஆலாம்பாடி, மணல் திட்டு, முதலை பண்ணை, ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

Next Story