மொபட்டில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் தாலி சங்கிலி பறிப்பு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


மொபட்டில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் தாலி சங்கிலி பறிப்பு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 9 March 2020 10:30 PM GMT (Updated: 9 March 2020 8:11 PM GMT)

பெரம்பலூரில் பட்டப்பகலில் மொபட்டில் சென்ற பெண்ணை கீழே தள்ளி விட்டு 7 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 6-வது வார்டு கான்மியான் நகரை சேர்ந்தவர் ரவி. அரசு பஸ் கண்டக்டர். இவரது மனைவி வசந்தி(வயது 38). இவர் நேற்று மாலை மொபட்டில் கடைவீதிக்கு சென்று விட்டு, வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் ரோவர் ஸ்கூல் ரோடு வழியாக சென்று கொண்டிருந்தபோது, அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 2 மர்மநபர்கள் வந்தனர். இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் ஹெல்மெட் அணிந்தும், பின்னால் அமர்ந்திருந்தவர் ஹெல்மெட் அணியாமலும் இருந்தார்.

முத்து நகரை தாண்டி புதிய மதனகோபாலபுரம் அருகே சென்றபோது வசந்தியின் மொபட்டை நெருங்கி சென்று மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த நபர், வசந்தியின் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை பறிக்க முயன்றார். இதனை சுதாரித்து கொண்ட வசந்தி திருடன், திருடன் என்று சத்தமிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மர்மநபர்கள் வசந்தியை மொபட்டுடன் கீழே தள்ளி விட்டு, அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலி சங்கிலியை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதில் வசந்திக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள், இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி தலைமையிலான போலீசார் வந்து விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை பார்வையிட்டு மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூரில் பட்டப்பகலில் துணிகரமாக நடந்த தாலி சங்கிலி பறிப்பு சம்பவம் பெண்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story