“பெண் குழந்தைகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை தான் சரியானது” தமிழிசை சவுந்தரராஜன் ஆவேசம்


“பெண் குழந்தைகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை தான் சரியானது” தமிழிசை சவுந்தரராஜன் ஆவேசம்
x
தினத்தந்தி 11 March 2020 12:30 AM GMT (Updated: 10 March 2020 4:53 PM GMT)

‘பெண் குழந்தைகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை தான் சரியானது’ என தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆவேசமாக பேசினார்.

திருச்சி,

திருச்சி அனைத்து பெண்கள் சங்கங்கள் மற்றும் ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி சார்பில் உலக மகளிர் தின விழா திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது. விழாவில் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

உலக மகளிர் தினம் என்பது ஒரு நாள் மட்டும் கொண்டாடக்கூடியது அல்ல. வருடம் முழுவதும் 365 நாட்களும் மகளிர் தினம் தான். வெளிநாடுகளில் வீட்டை நிர்வகிப்பவர்களை ‘ஹோம் மேக்கர்’ என அழைப்பது உண்டு. நமது நாட்டில் மட்டும் தான் வீட்டை நிர்வகிக்க கூடிய பெண்ணை ‘இல்லத்து அரசி’ என அழைக்கிறார்கள்.

வணக்கம் செலுத்துதல்

கொரோனா வைரஸ் நம் நாட்டில் இல்லையென்றாலும் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நான் இங்கு வரும்போது வணக்கம்... வணக்கம்... என இரு கரம் கூப்பி தெரிவித்தாலும், சிலர் கைகளை கொடுத்தனர். இருந்தாலும் நாம் தான் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமிழகத்தில் கொரோனா வைரஸ் இல்லை எனவும், அதனால் முககவசம் கூட அணிய வேண்டாம் என்றும் தெரிவித்துவிட்டனர். அனைவரும் தைரியமாக இருக்கலாம். ஆனால் அஜாக்கிரதையாக இருக்க கூடாது. அனைவரும் கைகளை நன்றாக கழுவ வேண்டும். கொரோனா வைரசில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

நம் நாட்டின் கலாசாரம் கையெடுத்து கும்பிடுவது தான். கை குலுக்குவது என்பது அயல்நாட்டு கலாசாரம். ஆனால் வெளிநாட்டில் இன்று நமது கலாசாரத்தை பின்பற்ற தொடங்கிவிட்டனர். நம் கலாசாரத்தை அப்படியே பின்பற்றினால் வைரஸ் உள்பட யாரும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.

தற்காப்பு கலை

சின்ன விஷயங்களை கவனத்தில் எடுத்துக்கொண்டால் பெரிய விஷயங்கள் தானாக சாதனையாக மாறும். வாழ்க்கையை சரி செய்து வாழ வேண்டும் என்றால் அந்தந்த நேரத்திற்கு ஏற்ப வளைந்தும், நெளிந்தும் அதற்கு ஏற்ப நிமிர்ந்தும் செல்ல வேண்டும்.

பெண்களுக்காக மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. நாட்டில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் தமிழகத்தில் தான் அதிக பெண்கள் சேமிப்பு வைத்துள்ளனர். பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் சிலம்பம், வர்மக்கலை உள்ளிட்ட தற்காப்பு கலைகளை கற்றுக்கொடுங்கள். யாராவது மோசமான எண்ணத்தில் அணுகினால் அவர்களை தற்காப்பு கலைகள் மூலம் விரட்டி அடியுங்கள். பெண்கள் படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் தற்காப்பு கலைகளை பாடத்தில் ஒரு பகுதியாக சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு பெண் குழந்தை வெளியில் சென்றுவிட்டு பாதுகாப்பாக வீடு திரும்ப முடியவில்லை.

தூக்கு தண்டனை

தமிழகத்தில் திருமண வீட்டிற்கு பெற்றோருடன் சென்ற ஒரு பெண் குழந்தை நசுக்கப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்தியை பார்த்தேன். எப்படி இந்த மனம் மனித மிருகங்களுக்கு வருகிறது. அதனால் இப்படிப்பட்ட மிருகங்களுக்கு தூக்கு தண்டனை தான் கொடுக்க வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. இதில் மனிதாபிமானம் பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை. சில பேர் மனிதாபிமானம் இல்லை என கூறுகின்றனர். மிருகங்களுக்கு என்ன மனிதாபிமானம் என்பது தான் எனது கருத்து. அதனால் பெண் குழந்தைகளை பாதுகாப்பாக வையுங்கள். அவர்களை கண்காணித்து வளருங்கள். பெண்களின் பாதுகாப்பிற்கு அரசும் கவனமும் செலுத்தி கொண்டிருக்கிறது. நாமும் கவனம் செலுத்துவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் திருச்சி பாரதி தாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீனா உள்பட சங்க நிர்வாகிகள், பெண்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அந்தவகையில் சரசுவதி ராமநாதன், அகிலா நாராயணசுவாமி, மகப்பேறு டாக்டர் சர்மிளா, சமூக சேவையாளர் விஜயா வடிவேல் ஆகியோருக்கு விருதுகளை தமிழிசை சவுந்தரராஜன் வழங்கினார்.

ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம்

முன்னதாக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார். அவரை கோவில் நிர்வாகம் சார்பில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் பட்டர்கள் வரவேற்றனர். கோவிலில் ஆண்டாள் யானையிடம் தமிழிசை சவுந்தரராஜன் ஆசி பெற்றார். தரிசனத்திற்கு பின் திருச்சி இ.பி.ரோட்டில் உள்ள தனியார் பள்ளி விழாவில் அவர் பங்கேற்றார். திருச்சியில் நிகழ்ச்சிகளை முடிந்த பின் அவர் கார் மூலம் தேனி புறப்பட்டு சென்றார்.


Next Story