மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க. கொடுக்காதது ஏன்? திருமாவளவன் எம்.பி. விளக்கம்


மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க. கொடுக்காதது ஏன்? திருமாவளவன் எம்.பி. விளக்கம்
x
தினத்தந்தி 10 March 2020 11:30 PM GMT (Updated: 10 March 2020 8:13 PM GMT)

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க. கொடுக்காதது ஏன்? என்பது பற்றி திருமாவளவன் எம்.பி. விளக்கம் அளித்துள்ளார்.

செம்பட்டு,

டெல்லி வன்முறை இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தி விட்டது. வன்முறை என்ற பெயரில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. முன்பு குஜராத் முதல்-மந்திரியாக நரேந்திர மோடி இருந்தபோதும், அங்கு உள்துறை மந்திரியாக அமித்ஷா இருந்தபோதும் குஜராத்தில் இதுபோன்ற வன்முறை நடந்தது. குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு ஆகியவை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாளை(இன்று, புதன்கிழமை) கர்நாடகாவிலும், அதைத்தொடர்ந்து ஆந்திராவிலும் பேரணி நடைபெற உள்ளது. ஆந்திராவில் நடைபெறும் பேரணிக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இந்த விஷயத்தில் அ.தி.மு.க. அரசு, பா.ஜ.க.வுடன் இணக்கமாக இருந்தால், வருகிற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே பா.ஜ.க.வுடனான கூட்டணியை அ.தி.மு.க. தவிர்ப்பது நல்லது. தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பழகன், கே.பி.சாமி எம்.எல்.ஏ. ஆகியோர் மறைவின் போது, நேரில் சென்று அ.தி.மு.க. அஞ்சலி செலுத்தியது தமிழ்நாட்டில் நல்ல அரசியல் தொடர்புக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

ரஜினிகாந்திடம் தான் கேட்க வேண்டும்

மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஏன் எங்களுக்கு வழங்கப்படவில்லை என்ற கேள்வியே தவறு. அ.தி.மு.க. கூட்டணியில் கூட்டணி கட்சியினர் தங்களுக்கு வாய்ப்பு கேட்டு தலைவர்களை சந்தித்து வருகின்றனர். ஆனால் தி.மு.க. கூட்டணியில் கூட்டணி கட்சியினர் தங்கள் கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று எப்போதும் அறிவுறுத்தவில்லை. எனவே இந்த விஷயத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வை ஒப்பிடக் கூடாது. நடிகர் ரஜினிகாந்த் ஏமாற்றம் என்று கூறியது பற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும். கட்சி தலைமை மற்றும் முதல்-அமைச்சர் பதவி தொடர்பாக அவர் பேசினார் என்று தமிழருவி மணியன் கூறியது பற்றி தெரியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது அவருடன் பெரம்பலூர் மண்டல செயலாளர் கிட்டு உள்பட கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.

Next Story