வீட்டில் கியாஸ் கசிந்து தீ விபத்து குழந்தை உள்பட 4 பேர் படுகாயம்


வீட்டில் கியாஸ் கசிந்து தீ விபத்து குழந்தை உள்பட 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 10 March 2020 10:46 PM GMT (Updated: 10 March 2020 10:46 PM GMT)

வீட்டில் கியாஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டதில் குழந்தை உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் செட்டி தெரு அய்யப்பன் கோவில் அருகே வசித்து வருபவர் மாரியப்பன் (வயது 30). இவர் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அனுமகாலட்சுமி (27). இந்த நிலையில் நேற்று காலை அனுமகாலட்சுமி வழக்கம் போல சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது கியாஸ் கசிந்து சமையல் அறை முழுவதும் பரவியது.

இதில் தீப்பிடித்து அனுமகாலட்சுமி மற்றும் அவரது மகள் பிரசித்தா (1) இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்ட மாரியப்பன் மற்றும் அனுமகாலட்சுமியின் தந்தை தீரவாசகம் (50) ஓடி வந்து அவர்களை காப்பாற்ற முயன்றனர். அவர்களுக்கும் தீ காயம் ஏற்பட்டது.

அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து அவர்களை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனுமகாலட்சுமி மற்றும் குழந்தை பிரசித்தா இருவரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story