மீன்பிடித்துறைமுகத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க எதிர்ப்பு கருவாடு உற்பத்தியாளர்கள் சாலை மறியல்


மீன்பிடித்துறைமுகத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க எதிர்ப்பு கருவாடு உற்பத்தியாளர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 11 March 2020 11:30 PM GMT (Updated: 11 March 2020 6:39 PM GMT)

அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கருவாடு உற்பத்தியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகை அக்கரைப்பேட்டையில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். அக்கரைப்பேட்டை மீன்பிடித்துறைமுகத்தில் கருவாடு காயவைக்கும் தளங்கள் உள்ளன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் குடிசைகள் அமைத்து கருவாடு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இங்கிருந்து வெளியூர்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் கருவாடுகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தின் விரிவாக்கம் சுற்றுச்சுசுவர் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

சாலை மறியல்

சுற்றுச்சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவிப்பு கருவாடு உற்பத்தியாளர்கள் நேற்று அக்கரைப்பேட்டை பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைப்பதற்காக கருவாடு தயாரிக்கும் தொழிலாளர்களின் இடங்களை காலி செய்ய கூறுகிறார்கள். இந்த இடத்தை விட்டால் எங்களுக்கு வேறு தகுந்த மாற்று இடமோ, தொழிலோ கிடையாது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் இடத்தை காலி செய்யமாட்டோம். எனவே தொழிலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு சுற்றுசுவர் அமைக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என கூறி கோ‌‌ஷங்களை எழுப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்த நாகை டவுன் போலீசார் மற்றும் மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் மறியலில் ஈடுபட்ட கருவாடு உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக அக்கரைப்பேட்டை வழியாக வேளாங்கண்ணி செல்லும் சாலையில் சுமார் 30 நிமிடம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

Next Story