உடுமலையில் போதை மாத்திரை விற்ற 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

உடுமலையில் போதை மாத்திரை விற்ற 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
உடுமலை,
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதிகளில், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக உடுமலை போலீசாருக்கு கடந்த மாதம் புகார் வந்தது.இது குறித்து உடுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, உடுமலை அய்யலு மீனாட்சி நகரைச் சேர்ந்த சாம் என்கிற சேரலாதன் சாமுவேல்(வயது 24), சாதிக் நகரைச் சேர்ந்த ரகுமான் (26),காஜாமைதீன்(33), தங்கம்மாள் ஓடை வீதியைச் சேர்ந்த சதாம் உசேன் (22) ஆகிய 4 பேரையும் கடந்த மாதம் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து போதை மாத்திரைகள், ஊசி ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர். கைதான 4 பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு மாஜிஸ்திரேட்டு உத்தரவுப்படி, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அவர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படி திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் போதை மாத்திரை விற்பனை செய்ததாக கைதான 4 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும்படி திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டார். இந்த உத்தரவு கோவை மத்திய சிறையில் உள்ள 4 பேருக்கும் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story