ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 27 பேர் காயம்


ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 27 பேர் காயம்
x
தினத்தந்தி 12 March 2020 10:15 PM GMT (Updated: 12 March 2020 3:25 PM GMT)

தாண்றீஸ்வரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 27 பேர் காயமடைந்தனர்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலை அடுத்த தாண்றீஸ்வரத்தில் சத்ரு சம்கார மூர்த்தி கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. ஜல்லிக்கட்டை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் சின்னத்தம்பி ஆகியோர் உறுதி மொழியுடன் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

இதில் 180 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, அன்னவாசல், சிவகங்கை, கரூர், விராலிமலை, கீரனூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 800 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் உள்பட மொத்தம் 27 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 3 பேர் மட்டும் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் மிக்சி, கிரைண்டர், குத்துவிளக்கு, நாற்காலிகள், வெள்ளி பாத்திரம், வெள்ளி நாணயம், ரொக்கப்பணம் போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை காண இலுப்பூர் வட்டாட்சியர் முருகேசன், ஒன்றிய தலைவர் ராமசாமி மற்றும் தாண்றீஸ்வரம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர். இலுப்பூர், கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சிகாமணி, பிரான்சிஸ் தலைமையில், அன்னவாசல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் தாண்றீஸ்வரம் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story