கோபி அருகே 2 நாட்களாக எண்ணெய் ஆலைகளில் வருமான வரித்துறையினர் சோதனை


கோபி அருகே 2 நாட்களாக எண்ணெய் ஆலைகளில் வருமான வரித்துறையினர் சோதனை
x
தினத்தந்தி 12 March 2020 9:30 PM GMT (Updated: 12 March 2020 5:51 PM GMT)

கோபி அருகே 2 நாட்களாக எண்ணெய் ஆலைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.

கடத்தூர், 

கோபி அருகே உள்ள காமராஜ் நகர் பகுதியில் ஈரோட்டை சேர்ந்த ஆறுமுகம், சண்முகம் ஆகியோருக்கு சொந்தமான 3 எண்ணெய் ஆலைகள் உள்ளன. இங்கிருந்து எண்ணெய் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இந்த எண்ணெய் ஆலைகளுக்கு கடந்த 10-ந் தேதி கோவை மண்டல வருமான வரித்துறை மற்றும் மாவட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென வந்தனர்.

பின்னர் அவர்கள் ஆலைகளில் சோதனை நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் 2-வது நாளாகவும் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது ஆலைகளில் இருந்து யாரையும் வெளியில் செல்லவும், வெளியில் இருந்து யாரும் உள்ளே வரவும் அனுமதிக்கவில்லை.

இரவு 10.30 மணி வரை இந்த சோதனை நடந்தது. அதன்பின்னரே அதிகாரிகள் ஆலைகளை விட்டு் வெளியே சென்றனர்.

இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. கோபி அருகே எண்ணெய் ஆலைகளில் 2 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story