வாழப்பாடி அருகே பயங்கரம் தலையை துண்டித்து 3-வது மனைவி கொலை 84 வயது முதியவர் கைது


வாழப்பாடி அருகே பயங்கரம் தலையை துண்டித்து 3-வது மனைவி கொலை 84 வயது முதியவர் கைது
x
தினத்தந்தி 13 March 2020 12:30 AM GMT (Updated: 12 March 2020 7:15 PM GMT)

வாழப்பாடி அருகே தலையை துண்டித்து 3-வது மனைவியை கொன்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.

வாழப்பாடி,

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள வெள்ளாளகுண்டம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 84). இவரது 3-வது மனைவி லட்சுமி (60). இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டதால், வெவ்வேறு இடங்களில் வசித்து வருகிறார்கள்.

நாராயணனும், லட்சுமியும் தனியாக வசித்து வந்தனர். நாராயணனின் முதல் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டதாகவும், 2-வது மனைவி தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மதுகுடிக்கும் பழக்கத்துக்கு அடிமையான நாராயணன் அடிக்கடி தனது 3-வது மனைவி லட்சுமியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கழுத்தை அறுத்தார்

மேலும் கொத்தனார் வேலை பார்த்து வந்த நாராயணன், சமீபகாலமாக வேலைக்கு செல்லவில்லை. தொடர்ந்து மனைவியிடம் வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் லட்சுமி, தனது மகன்களிடம் செலவுக்கு பணம் வாங்கி, அதில் சமையல் செய்து வந்துள்ளார்.

இதனிடையே நேற்று முன்தினம் மாலை லட்சுமியிடம், நாராயணன் மதுகுடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் தரமறுத்து உள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் இரவு 11.30 மணி அளவில் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்படவே, ஆத்திரம் அடைந்த நாராயணன், அங்கிருந்து கொடுவாளை எடுத்து லட்சுமியின் கழுத்தை அறுத்தார். இதில் தலை துண்டித்து, ரத்த வெள்ளத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கைது

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மனைவியை தலையை துண்டித்து கொன்றதாக நாராயணனை கைது செய்தனர். தொடர்ந்து அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நான் எனது 3-வது மனைவி லட்சுமியுடன் வசித்து வந்தேன். கொத்தனார் வேலை பார்த்து வந்த நான், சமீபகாலமாக வேலைக்கு செல்லாமல் இருந்தேன். மேலும் மது பழக்கத்துக்கு அடிமையானதால், எனக்கும், மனைவி லட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் அவள் என்னை மதிப்பது இல்லை. சமையல் செய்து வைத்தாலும், எனக்கு சரியாக சாப்பாடு கொடுப்பது இல்லை. ஏதாவது கேட்டால் என்னை தரக்குறைவாக பேசுவாள். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் கொடுவாளால் அவளது கழுத்தை அறுத்து தலையை துண்டித்து கொலை செய்தேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Next Story