திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் மர்மசாவு உதவி கலெக்டர் விசாரணை


திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் மர்மசாவு உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 12 March 2020 10:15 PM GMT (Updated: 12 March 2020 8:01 PM GMT)

கெலமங்கலம் அருகே திருமணமான 5 மாதத்தில் வடமாநிலத்தை சேர்ந்த புதுப்பெண் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

ராயக்கோட்டை,

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அஜய்கொண்டா. இவருடைய மனைவி ரிக்கி (வயது 20). இவர்களுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அஜய்கொண்டா தனது மனைவியுடன் கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள குந்துமாரனப்பள்ளியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். மேலும், பி.தம்மாண்டரப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அவர் வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு அஜய்கொண்டா வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார். பின்னர் நேற்று காலையில் வேலை முடிந்து அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் ரிக்கி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அஜய்கொண்டா மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதார்.

உதவி கலெக்டர் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் திம்மராயன் இந்த சம்பவம் தொடர்பாக கெலமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராகவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் ரிக்கியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், திருமணமான 5 மாதத்திற்குள் புதுப்பெண் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக ஓசூர் உதவி கலெக்டர் குமரேசன் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story