கொரோனா வைரஸ் நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்; கலெக்டர் தொடங்கி வைத்தார்


கொரோனா வைரஸ் நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்; கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 13 March 2020 10:30 PM GMT (Updated: 13 March 2020 4:25 PM GMT)

திருவண்ணாமலையில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாமை கலெக்டர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை,

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, திருவண்ணாமலை நகராட்சி ஆகியவை இணைந்து கொரோனா வைரஸ் நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் நடந்தது. முகாமை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இதில் கொரோனா வைரஸ் நோய் பரவாமல் இருக்க எவ்வாறு கை கழுவுவது என்பது குறித்து பள்ளி மாணவ-மாணவிகள் மூலம் விளக்கி கூறப்பட்டது. மேலும் பஸ்களில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை கலெக்டர் ஒட்டினார்.

பஸ்களில் லைசால் கிருமி நாசினி பயன்படுத்தி சுத்தம் செய்யும் முறையினை பார்வையிட்டு, பஸ்களில் பயணிக்கும் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் 20 சதவீதம் நோய் தொற்று உள்ளவர்கள் தும்மும் போதும், இருமும் போதும் அருகில் இருப்பவர்களுக்கு பரவும், 80 சதவீதம் வைரஸ் கிருமிகள் உள்ள இடங்களை கைகளால் தொடும் போது நமது கைகளில் ஒட்டிக்கொள்ளும். நாம் கைகளை கழுவாமல் நமது கண்கள், மூக்கு, வாய் போன்ற இடங்களில் தொடும்போது இந்த வைரஸ் நமது உடலுக்குள் சென்று நோய் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த வைரஸ் நம் சமூகத்தில் பரவாமல் இருக்க நாம் அனைவரும் இணைந்து செயல்படவேண்டியது அவசியம். அனைவரும் ஒரு நாளைக்கு 15 முறைகளாவது கைகளை சோப்பு போட்டு குறைந்தது 30 நொடிகள் நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

பொது இடங்களில் எச்சில் மற்றும் சளி துப்புவதை தவிர்க்க வேண்டும். தும்மல் மற்றும் இருமல் வந்தால் கைக்குட்டை பயன்படுத்த வேண்டும். நோய் தாக்குதல் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் சென்று உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் இது சம்பந்தமாக வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். நமது அரசும் சுகாதாரத்துறையும், மாவட்ட நிர்வாகமும் ஒருங்கிணைந்து அனைத்து தடுப்பு நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நமது நாட்டில் இந்த கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தை வரவிடாமல் தடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை துணை இயக்குனர் மீரா, திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் நவேந்திரன், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் டாக்டர் செந்தில் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story