இண்டூர் அருகே கல்குவாரி காண்டிராக்டர் வீட்டில் நகை, பணம் திருட்டு


இண்டூர் அருகே கல்குவாரி காண்டிராக்டர் வீட்டில் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 13 March 2020 10:00 PM GMT (Updated: 13 March 2020 9:21 PM GMT)

இண்டூர் அருகே கல் குவாரி காண்டிராக்டர் வீட்டில் நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.

பாப்பாரப்பட்டி,

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே சோளப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ் மகன் சின்னசாமி (வயது 45). இவர் கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் கல்குவாரி காண்டிராக்டராக உள்ளார். சின்னசாமி தனது குடும்பத்தினருடன் தர்மபுரியில் வசித்து வருகிறார்.

கடந்த 11-ந்தேதி சோளப்பாடியில் உள்ள பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. சின்னசாமியின் மனைவி புவனேஸ்வரி பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொள்ள தனது மகள் மற்றும் மகனுடன் சோளப்பாடிக்கு வந்தார். அங்கு ஆண்டு விழா முடிந்தவுடன் சோளப்பாடியில் உள்ள தங்கள் வீட்டில் சாப்பிட்டனர். பின்னர் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள சின்னசாமியின் பெற்றோர் வீட்டுக்கு குழந்தைகளுடன் புவனேஸ்வரி தூங்க சென்றுவிட்டார்.மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டுக்குள் அலமாரிகள் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த தங்க சங்கிலி, நெக்லஸ், மோதிரம் உள்ளிட்ட 10 பவுன் நகைகள், இரண்டு ஜோடி வெள்ளிக்கொலுசுகள் மற்றும் ரூ.50ஆயிரம் திருடப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக கர்நாடக மாநிலத்தில் இருந்த தனது கணவர் சின்னசாமிக்கு புவனேஸ்வரி தகவல் கொடுத்தார். சின்னசாமி உடனடியாக வந்து வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தார். அதில், முகமூடி ஆசாமி ஒருவர் கேமராவை மேலே தூக்கி விட்டுவிட்டு பூட்டை உடைக்கச்சென்ற காட்சிகள் பதிவாகி இருப்பது தெரிய வந்தது.

இது குறித்து சின்னசாமி இண்டூர் போலீசில் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு மேகலா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர். இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி நகை, பணம் திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story