மாமியாருடன் தகராறு: 3 மகன்களுக்கு வி‌‌ஷத்தை கொடுத்து பெண் தற்கொலை முயற்சி - விருத்தாசலம் அருகே பரபரப்பு


மாமியாருடன் தகராறு: 3 மகன்களுக்கு வி‌‌ஷத்தை கொடுத்து பெண் தற்கொலை முயற்சி - விருத்தாசலம் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 13 March 2020 10:00 PM GMT (Updated: 13 March 2020 11:15 PM GMT)

விருத்தாசலம் அருகே மாமியாருடன் குடும்ப பிரச்சினை காரணமாக ஏற்பட்ட தகராறில் தனது 3 மகன்களுக்கு வி‌‌ஷத்தை கொடுத்து பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வீரபாண்டியன். இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அருள் மல்லி (வயது 35). இவர்களுக்கு லிங்கே‌‌ஷ் (7), நரே‌‌ஷ் (5), ஹேமே‌‌ஷ்(2) என 3 மகன்கள் உள்ளனர்.

அருள் மல்லிக்கும், அவரது மாமியார் லட்சுமி என்பவருக்கும் அடிக்கடி பிரச்சினை நடந்து வந்தது. நேற்று இவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது அருள்மல்லியை அவரது மாமியார் திட்டியதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த அருள்மல்லி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து வீட்டில் இருந்த வி‌‌ஷத்தை எடுத்து தனது 3 மகன்களுக்கும் முதலில் கொடுத்து விட்டு, தானும் குடித்தார்.

சிறிது நேரத்தில் அவர்கள் 4 பேரும் மயங்கி விழுந்தனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட னர். அங்கு 4 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story