மகளிர் சுய உதவிக்குழுவினர் வங்கியில் கடன் பெற்று சுய தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும்


மகளிர் சுய உதவிக்குழுவினர் வங்கியில் கடன் பெற்று சுய தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும்
x
தினத்தந்தி 14 March 2020 11:00 PM GMT (Updated: 14 March 2020 7:17 PM GMT)

மகளிர் சுய உதவிக்குழுவினர் வங்கியில் கடன் பெற்று சுய தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் கூறினார்.

திருவாரூர்,

இந்தியன் வங்கியின் திருவாரூர் மண்டலம் சார்பில் மகளிர் தின விழா இந்தியன் வங்கியின் மன்னார்குடியின் சுய உதவிக்குழு சிறப்புக்கிளை வளாகத்தில் நடந்தது. தமிழக அரசு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதாரம் இயக்கம் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகிய திட்டங்களின் திருவாரூர் மாவட்ட திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன் விழாவுக்கு தலைமை தாங்கி மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.3.20 கோடி கடன் வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

சுயதொழில் தொடங்கி முன்னேற வேண்டும்

மகளிர் சுயஉதவிக்குழுவினர் வங்கியில் கடன் பெற்று சுய தொழில் தொடங்கி வருமானத்தை பெருக்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்தியன் வங்கியின் திருவாரூர் மண்டலம், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கங்கள் சார்பில் ரூ.5.40 கோடி கடன் வழங்கியுள்ளது. மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்குவதில் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்தியன் வங்கி திருவாரூர் மண்டலத்தை பாராட்டுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஓய்வூதிய திட்டங்கள்

இந்தியன் வங்கியின் திருவாரூர் மண்டல துணை மண்டல மேலாளர் மு.செல்வநாயகம் முன்னிலை வகித்து பேசுகையில், மகளிர் குழுக்கள் இந்தியன் வங்கியின் சேமிப்பு, கடன், காப்பீடு மற்றும் ஓய்வூதிய திட்டங்களில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். பிரதம மந்திரியின் சுரக்‌ஷா பீமா(விபத்து காப்பீடு), பிரதம மந்திரியின் ஜீவன் ஜோதி(ஆயுள் காப்பீடு) எல்.ஐ.சியின் ஆதார் ஷீலா திட்டம், அடல் ஓய்வூதிய திட்டம் ஆகிய திட்டங்களில் சேர்ந்து பயன்பெற வேண்டும். குழு உறுப்பினர்களின் குழந்தைகள் பெயரில் மாதாந்திர தொடர் சேமிப்பு தொடங்கி குழந்தைகளின் படிப்பு மற்றும் மருத்துவ செலவிற்கு பயன்படும் வகையில் சேமிக்க வேண்டும் என்றார்.

தஞ்சாவூர் எல்.ஐ.சி.கோட்ட அலுவலக முதன்மை மேலாளர் முருகன், மகளிர்கான எல்.ஐ.சியின் காப்பீடு திட்டம் குறித்து விளக்கி கூறினார். சிறப்பாக செயல்பட்டு வரும் சுயஉதவிக்குழுக்களுக்கும், திருவாரூர் மாவட்ட வங்கி வணிக தொடர்பாளருக்கும் திட்ட அதிகாரி ஸ்ரீலேகா தமிழ்செல்வன் விருதுகளை வழங்கினார். முன்னதாக இந்தியன் வங்கி மன்னார்குடி கிளை முதன்மை மேலாளர் பி.எஸ்.கலா வரவேற்றார். முடிவில் மன்னார்குடி மகளிர் சுயஉதவிக்குழு சிறப்பு கிளை மேலாளர் விக்னேஷ் நன்றி கூறினார்.

விழா நிகழ்ச்சிகளை அக்கிளையின் ஊழியர் கிறிஸ்டி தொகுத்து வழங்கினார். விழாவில் கிளையின் உதவி மேலாளர் மதன்ராஜ், கோபாலசமுத்திரம் கிளை மேலாளர் லட்சுமிநாயுடு, களப்பால் கிளை மேலாளர் கணேசன், திருவாரூர் மாவட்ட வங்கி வணிக தொடர்பாளர்கள், சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story