பயிற்சி முடித்த 350 வீரர்கள் சத்திய பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் நடைபெற்றது


பயிற்சி முடித்த 350 வீரர்கள் சத்திய பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் நடைபெற்றது
x
தினத்தந்தி 14 March 2020 11:30 PM GMT (Updated: 14 March 2020 10:22 PM GMT)

எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் பயிற்சி முடித்த 350 வீரர்கள் சத்திய பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

குன்னூர்,

இந்திய ராணுவத்தில் மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டர் என்று அழைக்கப்படும் எம்.ஆர்.சி. ராணுவ முகாம் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இந்த ராணுவ முகாமில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய தென் மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் ராணுவத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.

தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு 42 வாரங்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியில் ஆயுத பயிற்சி, இந்திமொழி பயிற்சி, உடற்பயிற்சி போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்த பயிற்சியை முடிக்கும் வீரர்கள் சத்திய பிரமாணம் எடுத்த பின்னர் எல்லைப்பகுதியில் உள்ள யூனிட்டுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

சத்திய பிரமாணம்

இந்த நிலையில், பயிற்சி முடித்த 350 ராணுவ வீரர்களுக்கு சத்திய பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி குன்னூர் அருகே உள்ள எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு எம்.ஆர்.சி. ராணுவ முகாம் கமாண்டென்ட் பிரிகேடியர் ராஜேஸ்வர் சிங் தலைமை தாங்கி இளம் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் சத்திய பிரமாணம் எடுக்கும் இளம் ராணுவ வீரர்கள் பகவத்கீதை, பைபிள், குரான் மற்றும் உப்பு ஆகியவை கொண்ட தட்டில் கை வைத்து சத்திய பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

இதனைதொடர்ந்து பயிற்சி காலத்தில் சிறப்பாக செயல்பட்ட ராணுவ வீரர்களுக்கு பிரிகேடியர் ராஜேஸ்வர் சிங் பதக்கங்களை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் ராணுவ உயர் அதிகாரிகள், இளநிலை அதிகாரிகள், பயிற்சி பெறும் வீரர்கள் மற்றும் சத்திய பிரமாணம் எடுத்த இளம் ராணுவ வீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story