கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க எக்ஸ்பிரஸ், மின்சார ரெயில்களில் கிருமி நாசினி தெளிப்பு மத்திய, மேற்கு ரெயில்வே நடவடிக்கை


கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க எக்ஸ்பிரஸ், மின்சார ரெயில்களில் கிருமி நாசினி தெளிப்பு மத்திய, மேற்கு ரெயில்வே நடவடிக்கை
x
தினத்தந்தி 14 March 2020 11:56 PM GMT (Updated: 14 March 2020 11:56 PM GMT)

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மும்பையில் மத்திய, மேற்கு ரெயில்வே சார்பில் எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரெயில்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

மும்பை,

மும்பையில் மின்சார ரெயில் போக்குவரத்து மக்களின் உயிர் நாடியாக உள்ளது. தினமும் 80 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மும்பையில் மின்சார மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணம் செய்கின்றனர். பயணிகள் கூட்டம் காரணமாக ரெயில் நிலையங்கள், ரெயில்கள் மூலமாக கொரோனா வைரஸ் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே ரெயில் பயணிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மேற்கு ரெயில்வே தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

குறிப்பாக ரெயில் நிலையங்களில் ஒலி பெருக்கி மூலம் கொரோனா வைரஸ் குறித்து பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ரெயில்வே போலீசாரும் பயணிகளிடம் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதேபோல மத்திய, மேற்கு ரெயில்வே சார்பில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் சுமார் 200 மின்சார ரெயில்கள் தினமும் சுத்தம் செய்யப்பட்டு அதில் கிருமி நாசினிகள் தெளிக்கப்படுகின்றன. வழக்கமாக ரெயில்கள் 18 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீரால் கழுவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மேற்கு ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி ரவீந்தர் பாகர் கூறுகையில், ‘‘கடந்த ஒரு வாரமாக தினமும் ரெயில்கள் சுத்தம் செய்யப்படுகின்றன’’ என்றார்.

மத்திய ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி சிவாஜி சுதார் தெரிவிக்கையில், ‘நாங்களும் ரெயில்களை தினமும் சுத்தம் செய்து வருகிறோம். குறிப்பாக பயணிகள் அதிகம் நிற்கும் இடங்கள், கைப்பிடிகள், கை கழுவும் இடம், வாசல் உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. நீண்ட தூர ரெயில்களில் அடிக்கடி பெட்டிகளை சுத்தம் செய்ய ஊழியர்களிடம் அறிவுறுத்தி உள்ளோம்’ என்றார்.

ரெயில்கள் மட்டும் இன்றி ரெயில்நிலையங்களில் நகரும் படிக்கட்டுகள், லிப்டு, இருக்கைகளிலும் ரெயில்வே சாா்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

Next Story