பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் சட்டத்தை நிறைவேற்ற 2 நாள் சிறப்பு சட்டசபை கூட்டம் மராட்டிய அரசு அறிவிப்பு


பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் சட்டத்தை நிறைவேற்ற 2 நாள் சிறப்பு சட்டசபை கூட்டம் மராட்டிய அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 15 March 2020 12:12 AM GMT (Updated: 15 March 2020 12:12 AM GMT)

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் சட்டத்தை நிறைவேற்ற 2 நாள் சிறப்பு சட்டசபை கூட்டம் நடத்தப்படும் என அரசு தெரிவித்து உள்ளது.

மும்பை,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சமீபத்தில் 26 வயதான பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கும் அம்மாநில அரசு, திஷா எனும் புதிய சட்டத்தை கொண்டுவந்தது. இந்த சட்டம், பாலியல் குற்ற வழக்குகளை 14 நாட்களுக்குள் விசாரித்து முடிக்கவும், 21 நாட்களுக்குள் தீர்ப்பளிக்கவும் வகை செய்கிறது. இந்த நிலையில் மராட்டியத்திலும் இதேபோன்ற சட்டத்தை நிறைவேற்ற சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசு முடிவு செய்துள்ளது.

இந்த சட்டத்தை பட்ஜெட் கூட்டத்தில் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக அவசர சட்டம் நிறைவேற்றப்படலாம் என தெரிவித்தார்.

இதுகுறித்து நேற்று மேல்-சபையில் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சட்டசபை கூட்டத்தின் நாட்கள் குறைக்கப்பட்டன. இருப்பினும் இந்த நோயின் தாக்கம் குறைந்ததும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் சட்ட மசோதாவை நிறைவேற்ற 2 நாள் சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்டுவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

திஷா சட்டத்தை குறித்து அறிந்துகொள்ள நாங்கள் ஆந்திர மாநிலத்திற்கு சென்றிருந்தோம். இதுகுறித்து ஆய்வு செய்ய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு கூட்டத்திற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story