கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை வணிக வளாகங்கள், தியேட்டர்கள் மூடல் பெங்களூருவில் மக்கள் நடமாட்டம் குறைந்தது; பஸ், ரெயில் நிலையங்கள் வெறிச்சோடின


கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை வணிக வளாகங்கள், தியேட்டர்கள் மூடல் பெங்களூருவில் மக்கள் நடமாட்டம் குறைந்தது; பஸ், ரெயில் நிலையங்கள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 15 March 2020 12:41 AM GMT (Updated: 15 March 2020 12:41 AM GMT)

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக வணிக வளாகங்கள், தியேட்டா்கள் மூடப் பட்டன. இதனால் பெங்களூருவில் மக்கள் நடமாட்டம் குறைந்தது. மேலும் பஸ், ரெயில் நிலையங்களும் பயணிகள் இன்றி வெறிச்சோடின.

பெங்களூரு,

சீனாவில் கோரதாண்டவமாடிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியா உள்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கர்நாடகத்தில் 5 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கலபுரகியை சேர்ந்த 76 வயது முதியவரும் கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார்.

இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து பெங்களூருவுக்கு வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது பற்றி தெரியவந்தது. இதையடுத்து, விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக நேரடியாக ராஜீவ் காந்தி நெஞ்சக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதுபோல, அவரை ஆம்புலன்சில் அழைத்து வந்த டிரைவர் உள்ளிட்டோருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், கொரோனா வைரஸ் காரணமாக கலபுரகியை சேர்ந்த 76 வயது முதியவர் பலியானதை தொடர்ந்து, பெங்களூரு உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் ஒரு வாரம் வணிக வளாகங்கள், தியேட்டர்கள், இரவு நேர விடுதிகள், கேளிக்கை விடுதிகளை மூட வேண்டும் என்று நேற்று முன்தினம் முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டு இருந்தார். குறிப்பாக கோடை கால சிறப்பு முகாம்கள், திருமண நிகழ்ச்சிகள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள், விளையாட்டு போட்டிகள், கருத்தரங்குகள் உள்ளிட்ட பொது நிகழ்ச்சி நடத்துவதற்கும் கர்நாடக அரசு தடை விதித்துள்ளது.

இதையடுத்து, பெங்களூரு நகரில் நேற்று முன்தினம் இரவே சில வணிகவளாகங்கள் மூடப்பட்டன. இந்த நிலையில், கர்நாடக அரசின் உத்தரவின் பேரில் பெங்களூரு, மங்களூரு, உப்பள்ளி, மைசூரு உள்பட மாநிலம் முழுவதும் வணிக வளாகங்கள் அனைத்தும் நேற்று மூடப்பட்டன. சில மாவட்டங்களில் திறக்கப்பட்ட வணிக வளாகங்களும் மாவட்ட கலெக்டர்களின் உத்தரவின் பேரில் உடனடியாக மூடப்பட்டன.

இதுபோன்று, மாநிலம் முழுவதும் தியேட்டர்களும் நேற்று மூடப்பட்டன. மாநிலத்தில் உள்ள அனைத்து தியேட்டரிலும் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. கேளிக்கை விடுதிகள், அரசின் விடுதிகளில் வசித்து வந்த மாணவ, மாணவிகளும் விடுதியை காலி செய்துவிட்டு தங்களது வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். குறிப்பாக பெங்களூருவில் மக்களின் பொழுது போக்காக இருந்த வணிக வளாகங்கள், பூங்காக்கள், தியேட்டர்கள் நேற்று காலையில் இருந்தே திறக்கப்படவில்லை. பெங்களூரு மெஜஸ்டிக், சிவாஜிநகர், காந்திபஜார், கலாசி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சில வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து கடைகளை அடைத்திருந்தனர்.

பெங்களூரு நகரில் உள்ள சாலைகள் வாகனங்கள் இல்லாமலும், மக்கள் நடமாட்டம் இல்லாமலும் வெறிச்சோடி காணப்பட்டன. நகரின் இதயம் போன்ற பகுதியில் அமைந்துள்ள மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் பயணிகள் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தனர். எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும் நிலையில் நேற்று பயணிகள் குறைந்த அளவிலேயே வந்து சென்றதால் மெஜஸ்டிக் பஸ் நிலையமே வெறிச்சோடி கிடந்தது. பயணிகள் இல்லாமல் பி.எம்.டி.சி. பஸ்கள் மெஜஸ்டிக்கில் இருந்து புறப்பட்டு சென்றதை காண முடிந்தது. அதுபோல, கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் நிலையத்திலும், பெங்களூரு நகரில் உள்ள ரெயில் நிலையங்களிலும் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.

பெங்களூருவில் இருந்து கர்நாடகத்தின் பிற மாவட்டங்களுக்கு புறப்பட்டு சென்ற கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்களும் குறைந்த அளவு பயணிகளுடன் புறப்பட்டு சென்றன. பயணிகள் கூட்டம் இல்லாததால் வழக்கமாக இயக்கப்பட்ட பஸ்களில் இருந்து 10 சதவீதம் குறைவாகவே நேற்று பெங்களூருவில் பி.எம்.டி.சி. பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ் நிலையங்கள் போன்று மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் குறைந்த அளவே பயணிகள் இருந்தனர்.

பெங்களூருவில் கப்பன் பார்க், லால்பாக் உள்ளிட்ட பூங்காக்களும் திறக்கப்படவில்லை. நகரில் உள்ள பெரும்பாலான பூங்காக்கள் பூட்டியே கிடந்தன. நகரில் உள்ள முக்கிய கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. கொரோனா வைரஸ் பீதி காரணமாக பெங்களூரு நகரவாசிகள் நேற்று வீட்டை விட்டு வெளியே வராமல், வீட்டுக்குள்ளேயே முடங்கி போய் கிடந்தனர்.

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் அரசு பஸ்களில் பயணிகள் குறைவு காரணமாக, பெங்களூரு மாநகர ேபாக்குவரத்து கழகம் மற்றும் கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பீதியால் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்கள் மக்கள் இல்லாமல் வெறிச்சோடின. பெங்களூரு நகரமே மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருக்கிறது.

தியேட்டர்கள், வணிகவளாகங்கள் திறக்கப்படாமல் இருந்தாலும் மருந்து கடைகள், ஆஸ்பத்திரிகள், காய்கறி மார்க்கெட்டுகள் திறக்கப்பட்டு இருந்தன. இதனால் மக்களின் அத்தியாவசிய தேவைகள் கிடைப்பதில் எந்தவித இடையூறும் ஏற்படவில்லை. ஆனாலும் பெங்களூரு நகரில் உள்ள மார்க்கெட்டுகளிலும் குறைந்த அளவே மக்கள் வந்திருந்தனர். இதனால், போதிய வணிகம் நடைபெறாமல் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் இன்னும் 6 நாட்கள் இதே நிலைமை தான் நீடிக்கும் என்பதால், கர்நாடகத்தில் முழு அடைப்பு போன்ற ஒரு நிலை உருவாகி இருக்கிறது. கொரோனா வைரஸ் பீதியால் ஓட்டல்கள், பிற தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் சினிமா தொழில் முற்றிலும் முடங்கி போய் இருக்கிறது. என்றாலும் சினிமா படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெறுவதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

கொரோனா வைரஸ் பீதி காரணமாக வணிகவளாகங்கள், தியேட்டர்கள், திருமணங்கள் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிக்கு கர்நாடக அரசு தடை விதித்திருப்பதால் ஒரு வாரத்திற்கு கர்நாடகத்தில் ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். வரிகள் மூலமாக அரசுக்கு கிடைக்க வேண்டிய ரூ.2 ஆயிரம் கோடியும், பிற தொழில்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால் ரூ.18 ஆயிரம் கோடியும் இழப்பு ஏற்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

Next Story