காசிமேட்டில் மீன் வாங்க அலைமோதிய கூட்டம்


காசிமேட்டில் மீன் வாங்க அலைமோதிய கூட்டம்
x
தினத்தந்தி 15 March 2020 10:15 PM GMT (Updated: 15 March 2020 5:21 PM GMT)

கொரோனா வைரஸ் பீதியால் காசிமேட்டில் மீன் வாங்க நேற்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

திருவொற்றியூர்,

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பீதியால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக கோழி இறைச்சி உண்ணுவதால் இந்த வைரஸ் வேகமாக பரவுவதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

இதனால் அசைவ பிரியர்கள் கோழி இறைச்சிகளை வாங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் மீன்களை வாங்குவதற்காக அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மக்கள் மீன் உணவை உண்ணுவதில் ஆர்வம் காட்டி வருவதால் மீன்களை வாங்க நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே சென்னை காசிமேடு மீன்பிடி சந்தையில் அதிக கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் வழக்கத்துக்கு மாறாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று காசிமேடு மீன்பிடி சந்தையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

இதனால் காசிமேடு மீன் மார்க்கெட் களைகட்டியது. அதிகாலை முதலே மீன் வியாபாரம் ஜோராக நடைபெற்றதால் சீக்கிரமே மீன்கள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன. மேலும் மீன் வரத்து குறைவாக இருந்ததால் மீன்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டது.

Next Story