கொரோனா, பறவை காய்ச்சல் எதிரொலி: கோழி இறைச்சி விற்பனை 60 சதவீதம் குறைந்தது - மீன்விலை கிடு கிடு உயர்வு


கொரோனா, பறவை காய்ச்சல் எதிரொலி: கோழி இறைச்சி விற்பனை 60 சதவீதம் குறைந்தது - மீன்விலை கிடு கிடு உயர்வு
x
தினத்தந்தி 15 March 2020 10:15 PM GMT (Updated: 15 March 2020 5:54 PM GMT)

கொரோனா மற்றும் பறவை காய்ச்சல் எதிரொலியாக வேலூரில் கோழி இறைச்சி விற்பனை 60 சதவீதம் குறைந்து கடைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. அதே நேரத்தில் மீன் விலை 50 சதவீதம் உயர்ந்தும் மீன் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

வேலூர்,

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று அசைவ பிரியர்கள் அனைவரும் ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி மற்றும் மீன் ஆகியவற்றை வாங்கி சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் மார்க்கெட் மற்றும் இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இந்த நிலையில் கடந்த மாதம் முதல் உலக நாடுகளை கொரோனா வைரஸ் அச்சுறுத்திவருகிறது. இதன் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் முதல் கோழி இறைச்சி விற்பனை குறையத்தொடங்கியது. தற்போது பக்கத்து மாநிலமான கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது.

இதனால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே அவர்கள் கோழி இறைச்சி சாப்பிடுவதை தவிர்த்து வருகிறார்கள். அதற்கு பதிலாக அசைவ பிரியர்கள் மீன்களை அதிகமாக வாங்கி சமைக்கத்தொடங்கி உள்ளனர்.

இதனால் ஞாயிற்றுக்கிழமையான நேற்று வேலூரில் உள்ள கோழி இறைச்சி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டது. அதே நேரத்தில் பெங்களூரு ரோட்டில் உள்ள மீன்மார்க்கெட்டில் மீன் வாங்குவதற்கு கூட்டம் அதிகமாக இருந்தது.

கொரோனா வைரஸ் பீதி ஏற்படுவதற்கு முன்பு 160 ரூபாய்க்கு விற்ற ஒருகிலோ கோழி இறைச்சி நேற்று ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. சில கடைகளில் 60 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. ஆனாலும் வாங்குவதற்கு யாரும் வரவில்லை. இந்த நிலையில் பறவை காய்ச்சலும் ஏற்பட்டுள்ளதால் சில ஓட்டல்களில் ஒரு தந்தூரி வாங்கினால் ஒரு தந்தூரி இலவசம் என்றும், சில கடைகளில் ஒரு கிலோ கோழி இறைச்சி வாங்கினால் ½ கிலோ இலவசம் என்றும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. ஆனாலும் மக்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை. கொரோனா மற்றும் பறவை காய்ச்சல் பீதி காரணமாக வேலூரில் கோழி இறைச்சி விற்பனை 60 சதவீதம் குறைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.

இந்த சூழ்நிலையில் கோழி இறைச்சிக்கு மாறாக மீன்களை அதிகமாக வாங்கி சென்றனர். இதனால் மீன்களின் விலையில் உயர்வு ஏற்பட்டது நேற்று ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ரூ.900-க்கும், விறால் ரூ.600-க்கும், நண்டு ரூ.250-க்கும் விற்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இருந்த விலையை விட நேற்று மீன்விலை 50 சதவீதம் வரை உயர்ந்திருப்பதாக மீன் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Next Story