விருத்தாசலம் அருகே, பனியன் கம்பெனி ஏஜெண்டு அடித்துக் கொலை - தம்பதிக்கு வலைவீச்சு


விருத்தாசலம் அருகே, பனியன் கம்பெனி ஏஜெண்டு அடித்துக் கொலை - தம்பதிக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 15 March 2020 10:15 PM GMT (Updated: 15 March 2020 7:11 PM GMT)

விருத்தாசலம் அருகே முன்விரோதம் காரணமாக பனியன் கம்பெனி ஏஜெண்டு அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தம்பதியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த தே.பவழங்குடியை சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (வயது 60). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனிக்கு ஆட்களை வேலைக்கு அனுப்பி வைக்கும் ஏஜெண்டாக உள்ளார். இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த ஜெயராமன் மகன் கனகராஜ் (40) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கனகராஜ், தனது மனைவி செல்வியுடன் சேர்ந்து தாமரைச்செல்வனை ஆபாசமாக திட்டி, அடித்ததாக தெரிகிறது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த தாமரைச்செல்வன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் கனகராஜ், செல்வி ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடினர்.

இது குறித்த தகவல் அறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தாமரைச்செல்வன் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது இடப்பிரச்சினை காரணமாக ஏற்பட்ட தகராறில், தாமரைச்செல்வன் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து தாமரைச்செல்வனின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கனகராஜ், செல்வி ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக பனியன் கம்பெனி ஏஜெண்டு அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story