கொரோனா, பறவை காய்ச்சல் பீதி : கோவையில் மீன் விலை உயர்வு - வஞ்சிரம் கிலோ ரூ.1000-க்கு விற்பனை


கொரோனா, பறவை காய்ச்சல் பீதி : கோவையில் மீன் விலை உயர்வு - வஞ்சிரம் கிலோ ரூ.1000-க்கு விற்பனை
x
தினத்தந்தி 15 March 2020 10:15 PM GMT (Updated: 15 March 2020 10:15 PM GMT)

கொரோனா, பறவை காய்ச்சல் பீதியால் கோவையில் மீன் விலை உயர்ந்துள்ளது. வஞ்சிரம் கிலோ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கோவை,

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுஒருபுறம் இருக்க கேரளாவில் பறவை காய்ச்சல் தாக்கத்தால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.

பறவை காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸ் ஆகியவை கோழி இறைச்சி மூலம் பரவுவதாக சமூகவலைத்தளங்களில் வதந்தி பரப்பப் பட்டு வருகிறது. இதனால் கோழி இறைச்சி வாங்க தயக்கம் காட்டி வரு கின்றனர். மீன், ஆட்டிறைச்சியை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் கோவையில் மீன், ஆட்டிறைச்சி விலை உயர்ந்து உள்ளன.

இதன்படி கடந்த வாரம் கிலோ ரூ.700 முதல் ரூ.800 -க்கு விற்ற வஞ்சிரம் மீன் (பெரியது) தற்போது ரூ.900 முதல் ரூ.1,000-க்கும் விற்பனையானது. மற்ற மீன்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு (பழைய விலை அடைப்புக்குறிக்குள்):-

மத்தி ரூ.120 (ரூ.100), இறால் ரூ.450 (ரூ.350), நெத்திலி ரூ.220 (ரூ.180), பாறை ரூ.350 (ரூ.250), ஊளி ரூ.300 (ரூ.200), வாவல் ரூ.650 (ரூ.450)-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இது குறித்து மீன் வியாபாரிகள் கூறும் போது, இந்த மாத தொடக்கத் தில் வரத்து அதிகமாக இருந்ததால் மீன்விலை கொஞ்சம் குறைந்தது. தற்போது கொரோனா, கேரளாவில் தோன்றிய பறவை காய்ச்சல் காரணமாக மீன்வகைகளை அதிகம் வாங்கி செல்கின்றனர். மீன் நுகர்வு அதிகரித்ததால் மீன்களின் விலை உயர்ந்து உள்ளது என்றனர்.

இது போல் கொரோனா, பறவை காய்ச்சல் பீதி காரணமாக கோவையில் ஆட்டிறைச்சி விலையும் உயர்ந்து உள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.640 முதல் ரூ.660 வரை விற்பனை செய்யப்பட்ட ஆட்டிறைச்சி தற்போது ரூ.700 முதல் ரூ.720 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Next Story