பள்ளியாடி தொழிலாளி கொலை: மேலும் ஒருவர் கைது


பள்ளியாடி தொழிலாளி கொலை: மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 16 March 2020 12:00 AM GMT (Updated: 15 March 2020 10:41 PM GMT)

பள்ளியாடி தொழிலாளி கொலை வழக்கில் தனிப்படை போலீசார் மேலும் ஒரு வாலிபரை கைது செய்துள்ளனர்.

பத்மநாபபுரம்,

தக்கலை அருகே பள்ளியாடி கஞ்சிகுழி பகுதியை சேர்ந்தவர் ஜாஸ்பின் ஜோஸ் (வயது 31), தொழிலாளி. இவர் கடந்த ஜனவரி மாதம் 24-ந் தேதி வேலைக்கு சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர், இதுகுறித்து தக்கலை போலீசில் புகார் செய்தனர்.

இந்தநிலையில் பள்ளியாடி ரெயில்நிலைய சந்திப்பு பகுதியில் தண்டவாளம் அருகே ஒரு ஆண் பிணம் கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், பிணமாக கிடந்தது ஜாஸ்பின் ஜோஸ் என்பது தெரியவந்தது. மேலும், அதே பகுதியை சேர்ந்த செல்வின்(20) உள்பட 5 பேர் சேர்ந்து ஜாஸ்பின் ஜோசை அழைத்து சென்று கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து செல்வினை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

மேலும் ஒருவர் கைது

இதற்கிடையே இந்த வழக்கு தக்கலை போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில் தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு 4 பேரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த பள்ளியாடி ஈச்சவிளையை சேர்ந்த பிரபு(28) என்பவர் தக்கலை பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் விரைந்து சென்று பிரபுவை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும், வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒரு பெண்ணையும் அழைத்து சென்று தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story