காலியான அரசு, தனியார் கட்டிடங்களில் அனுமதித்து கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் டுவிட்டரில் குமாரசாமி தகவல்


காலியான அரசு, தனியார் கட்டிடங்களில் அனுமதித்து கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் டுவிட்டரில் குமாரசாமி தகவல்
x
தினத்தந்தி 15 March 2020 11:41 PM GMT (Updated: 15 March 2020 11:41 PM GMT)

கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பவர்களை காலியான அரசு, தனியார் கட்டிடங்களில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டுவிட்டரில் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறி இருப்பதாவது:-

கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பவர்களுக்கு, அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுடன் சேர்த்து சிகிச்சை அளிப்பது சரியா? என்பது தெரியவில்லை. கொரோனா அறிகுறி இருப்பவர்களுக்கு தனியாக சிகிச்சை அளிப்பதே முன் எச்சரிக்கை நடவடிக்கை ஆகும். சில ஆஸ்பத்திரிகளில், கொரோனா அறிகுறி இருப்பவர்களுக்கான தனி வார்டுகள் அமைத்து சிகிச்சை அளித்து வருவதாக அரசு தெரிவித்துள்ளது.

மற்ற நோயாளிகளுடன் சேர்த்து கொரோனா அறிகுறி இருப்பவர்களுக்கும் ஒரே ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக, மாநிலத்தில் காலியாக இருக்கும் அரசு கட்டிடங்கள், தனியார் கட்டிடங்களை கொரோனா அறிகுறி இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன் படுத்தி கொள்ள வேண்டும். மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கொரோனா அறிகுறி இருப்பவர்களை அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள், அரசின் பிரசாரங்களாக இருக்க கூடாது. அவ்வாறு இருந்தால் மக்களிடையே பீதியை ஏற்படுத்துவதாக அமைந்து விடும். மக்களிடையே உண்டாகி இருக்கும் பீதியை குறைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானதாகும். கொரோனா வைரஸ் குறித்து மக்களிடையே இரு துருவங்கள் விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.

சுகாதாரத்துறை மந்திரி மற்றும் மருத்துவ கல்வித்துறை மந்திரி இணைந்து பணியாற்றட்டும். இரு துறைகளுக்கும் இடையேயும் பரஸ்பரம் புரிந்துணர்வு இருக்க வேண்டும். மக்களிடையே நன்மதிப்பை பெறும் நோக்கத்தில் செயல்பட்டு, தேவையில்லாத பிரச்சினைகளை மக்களிடையே ஏற்படுத்த கூடாது. இவ்வாறு குமாரசாமி கூறியுள்ளார்.

Next Story