திருட்டுப்போன தாய் ஆட்டை மீட்கக்கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு ஆட்டுக்குட்டியுடன் வந்த ஆசிரியர்


திருட்டுப்போன தாய் ஆட்டை மீட்கக்கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு ஆட்டுக்குட்டியுடன் வந்த ஆசிரியர்
x
தினத்தந்தி 16 March 2020 11:30 PM GMT (Updated: 16 March 2020 5:37 PM GMT)

திருட்டுப்போன தாய் ஆட்டை மீட்கக்கோரி திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு ஆட்டுக்குட்டியுடன் ஆசிரியர் ஒருவர் மனு கொடுக்க வந்தார்.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை வழக்கம்போல மக்கள்குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் எஸ்.சிவராசு, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் நடவடிக்கைக்கு அனுப்பி வைத்தார். இந்த கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக திருச்சி உறையூர் காசிசெட்டித்தெருவை சேர்ந்த சரவணன் என்பவர், ஆட்டுக்குட்டியுடன் வந்தார்.

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் சரவணன் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். ஆட்டுக்குட்டியின் கழுத்தில் வாசகம் அடங்கிய அட்டை தொங்கவிடப்பட்டிருந்தது. அதில்,‘என் அண்ணாவையும், அம்மாவையும் மீட்டுத்தாருங்கள்’ என எழுதப்பட்டிருந்தது. ஆட்டுக்குட்டியுடன் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மனுவில் கூறப்பட்டுள்ளது குறித்து ஆசிரியர் சரவணன் கூறியதாவது:-

குட்டியுடன் தாய் ஆடு திருட்டு

நான் ஆசிரியர் வேலைபார்த்தாலும் சில ஆடுகளையும் வளர்த்து வருகிறேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது வெள்ளாடு ஒன்று 2 குட்டிகளை ஈன்றது. கடந்த 13-ந் தேதி கொட்டகையில் கட்டப்பட்டு இருந்த குட்டியுடன் தாய் ஆட்டை மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் திருடிச்சென்று விட்டனர். அது கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகி இருந்தது.

இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தேன். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கிடையே தாயை பிரிந்த ஒரு குட்டி தவியாய் தவித்து வந்தது. எனவே, தாய் ஆட்டை எப்படியாவது மீட்டு குட்டியுடன் சேர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கலெக்டரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. திருச்சியில் நகைக்கடை ஒன்றில் 28 கிலோ தங்கநகைகள் கொள்ளைபோனது. அதை போலீசார் உடனடியாக கண்டுபிடித்து விட்டனர். அதேபோல நான் தங்கமாக வளர்த்த 18 கிலோ எடையுள்ள ஆட்டையும், குட்டியையும் போலீசார் கண்டுபிடித்து தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story