குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பொதுக்கூட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 16 March 2020 10:15 PM GMT (Updated: 16 March 2020 7:47 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து எஸ்.புதூர் அருகே கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.

எஸ்.புதூர்,

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கரிசல்பட்டி முஸ்லிம் ஜமாத் கமிட்டி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் எஸ்.புதூர் அருேக உள்ள கரிசல்பட்டியில் நடைபெற்றது. ஜமாத் கமிட்டி தலைவர் காதர்ஷா தலைமை தாங்கினார். ஜமாத்தார்கள் முன்னிலை வகித்தனர். கரிசல்பட்டி ஜும்மா பள்ளிவாசல் தலைமை இமாம் சேக்தாவுது, எஸ்.டி.பி.ஐ. சிவகங்கை மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் ரசாக் வர வேற்றனர்.

முன்னதாக பள்ளிவாசலில் இருந்து பொதுக்கூட்டம் நடைபெற்ற கலையரங்கம் வரை 250 மீட்டர் நீளம் உள்ள தேசிய கொடியை ஊர்வலமாக எடுத்துச்சென்றனர். அதனை தொடர்ந்து கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் கண்டன பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது.

தொடர்ந்து பெரியகருப்பன் எம்.எல்.ஏ., விடுதலை சிறுத்தை கட்சி மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சிவச்சந்திரன், தமிழ்நாடு என்.சி.எச்.ஆர்.ஓ. பொதுச்செயலாளர் ஷாஜகான், ம.தி.மு.க. மாநில தேர்தல் பணி செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம், நாம் தமிழர் கட்சி மாநில உழவர் பாசறை செயலாளர் சிவராமன், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக், சி.பி.எம். மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், தமிழர் முன்னணி மாநில பொதுச் செயலாளர் இமயம் சரவணன் ஆகியோர் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கண்டன உரை நிகழ்த்தினர்.

இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள், ஆண்கள் கலந்து கொண்டனர். திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாத்துரை தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படிருந்தனர். முடிவில் கரிசல்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஷாஜகான் நன்றி கூறினார்.

Next Story