நெல்லை-தென்காசி மாவட்டங்களில் 5-ம் வகுப்பு வரை விடுமுறை: 2,916 பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன


நெல்லை-தென்காசி மாவட்டங்களில் 5-ம் வகுப்பு வரை விடுமுறை: 2,916 பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 17 March 2020 12:00 AM GMT (Updated: 16 March 2020 9:18 PM GMT)

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 5-ம் வகுப்பு வரை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால், 2 ஆயிரத்து 916 பள்ளிக்கூடங்கள் நேற்று மூடப்பட்டன. சினிமா தியேட்டர்களும் இயங்கவில்லை.

தென்காசி,

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. டாக்டர்கள், ரெயில்வே ஊழியர்கள், போலீஸ்காரர்கள் முககவசம் அணிந்து பணியாற்றி வருகிறார்கள். நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரி டாக்டர்கள் நேற்று முககவசம் அணிந்து பணியாற்றினர்.

பள்ளிக்கூடங்கள் மூடல்

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் 5-ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் வருகிற 31-ந் தேதி வரை விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி நெல்லை, தென்காசி மாவட்டங்களின் 5-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களும் நேற்று மூடப்பட்டன. நெல்லை மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், தனியார் தொடக்க பள்ளிகள், நர்சரி பள்ளிகள் என மொத்தம் 1,812 பள்ளிக்கூடங்கள் உள்ளன. அவை அனைத்தும் மூடப்பட்டன. ஆனால் ஆசிரியர்கள் வழக்கம் போல் பணிக்கு வந்தார்கள். அதுபோல் தென்காசி மாவட்டத்தில் 1,104 பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மொத்தம் 2 ஆயிரத்து 916 பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. சில பள்ளிக்கூடங்களுக்கு மாணவ-மாணவிகள் வந்தனர். அவர்களை ஆசிரியர்கள் திருப்பி அனுப்பினர். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வழக்கம் போல் வந்து தேர்வு எழுதினர். பள்ளிக்கூடத்துக்கு வந்த சில ஆசிரியர்கள் அருகே உள்ள தெருக்களில் கொரோனா வைரஸ் பற்றிய துண்டு பிரசுரம் வினியோகம் செய்தனர்.

சினிமா தியேட்டர்கள்

நெல்லை மாநகர பகுதியில் 6 சினிமா தியேட்டர்களும், புறநகர் பகுதியில் 2 சினிமா தியேட்டர்களும் உள்ளன. அந்த தியேட்டர்கள் அனைத்தும் நேற்று மூடப்பட்டன. தியேட்டர்களுக்கு வெளியே காட்சிகள் கிடையாது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தது. சில ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வந்து ஏமாற்றம் அடைந்தனர்.

இதுகுறித்து நெல்லை மாவட்ட தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சினிமா தியேட்டர்களை மூட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி நாங்கள் தியேட்டர்களை இயக்கவில்லை. அரசு அனுமதி பெற்ற பிறகு தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்படும்“ என்றார்.

கோவில்கள் வெறிச்சோடின

நெல்லையப்பர் கோவில், சாலைகுமாரசாமி கோவில், பாளையங்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவில், சிவன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. பல கோவில்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

தினமும் நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் ஏராளமான மக்கள் வந்து செல்வார்கள். கொரோனா வைரஸ் காரணமாக நெல்லை மாவட்ட அறிவியல் மையம் நேற்று மூடப்பட்டது. இதனால் ஏராளமான மக்கள் வந்து திருப்பி சென்றனர். பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரியில் ஊழியர்கள் முககவசம் அணிந்து பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்கள். அதுபோல் பெட்ரோல் பல்க்கில் ஊழியர்கள் முககவசம் அணிந்து வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டனர்.

Next Story