குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு: சேமிப்பு தொகையை திரும்பப்பெற வங்கிகள் முன்பு திரண்ட இஸ்லாமியர்கள்


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு: சேமிப்பு தொகையை திரும்பப்பெற வங்கிகள் முன்பு திரண்ட இஸ்லாமியர்கள்
x
தினத்தந்தி 16 March 2020 11:30 PM GMT (Updated: 16 March 2020 10:39 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சேமிப்பு தொகையை திரும்பப்பெற வங்கிகள் முன்பு இஸ்லாமியர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பனந்தாள்,

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

குடியுரிமை திருத்த சட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து சேமிப்பு மற்றும் வைப்பு தொகையை திரும்ப பெறும் நூதன போராட்டத்தில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டனர்.

கணக்குகளை முடித்துக்கொண்டனர்

போராட்டத்தையொட்டி சோழபுரத்தில் உள்ள 2 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் முன்பு திரண்ட இஸ்லாமியர்கள் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கோ‌‌ஷம் எழுப்பினர்.இதையடுத்து பலர் தங்கள் வங்கி கணக்குகளை முடித்து கொண்டனர். இதன் மூலம் ரூ.10 லட்சம் வங்கிகளில் இருந்து திரும்ப பெறப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பட்டுக்கோட்டை

பட்டுக்கோட்டை வடசேரி ரோடு பெரிய பள்ளிவாசல் அருகில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி இஸ்லாமிய பெண்கள் நேற்று 21-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நகர தி.மு.க. பொறுப்பாளர் எஸ்.ஆர்.என்.செந்தில் குமார் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், முஸ்லிம் ஜமாத்தார்கள், உலமாக்கள் கலந்து கொண்டு பேசினர். முடிவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் சுதாகர் நன்றி கூறினார்.

Next Story