மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்: கிராம நிர்வாக அதிகாரி உள்பட 2 பேர் சாவு - செய்துங்கநல்லூரில் பரிதாபம்


மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்: கிராம நிர்வாக அதிகாரி உள்பட 2 பேர் சாவு - செய்துங்கநல்லூரில் பரிதாபம்
x
தினத்தந்தி 16 March 2020 10:52 PM GMT (Updated: 16 March 2020 10:52 PM GMT)

செய்துங்கநல்லூரில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் கிராம நிர்வாக அதிகாரி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

ஸ்ரீவைகுண்டம்,

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). இவர் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறியில் கிராம நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவரது நண்பர் வி.எம்.சத்திரத்தை சேர்ந்த அவினா‌‌ஷ் நாதன் (27).

நேற்று முன்தினம் நள்ளிரவில் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். செய்துங்கநல்லூர் பெட்ரோல் பங்க் பகுதியில் சென்றபோது, அந்த பங்க்கில் இருந்து வெளியே வந்த வேன் ஒன்று திடீரென்று மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் அவினா‌‌ஷ் நாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பலத்த காயமடைந்த மணிகண்டனை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவரும் பரிதாபமாக இறந்து போனார். இந்த விபத்து குறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவரான முத்தாலங்குறிச்சியை சேர்ந்த திருப்பாற்கடலை தேடி வருகின்றனர்.

Next Story