பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்தது மும்பை பெருநகரில் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம்


பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்தது  மும்பை பெருநகரில் 13 பேருக்கு கொரோனா வைரஸ்  தடுப்பு நடவடிக்கை தீவிரம்
x
தினத்தந்தி 17 March 2020 12:21 AM GMT (Updated: 17 March 2020 12:21 AM GMT)

மும்பை பெருநகரில் 13 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்து உள்ளது.

மும்பை, 

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மராட்டிய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நேற்று முன்தினம் மாலை வரை மராட்டியத்தில் கொரோனாவால் 32 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இந்தநிலையில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்தது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி புனேயில் 16 பேரும், மும்பையில் 6 பேரும், நாக்பூரில் 4 பேரும், யவத்மால், கல்யாண், நவிமும்பையில் தலா 3 பேரும், ராய்காட், தானே, அகமதுநகர் மற்றும் அவுரங்காபாத்தில் தலா ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஸ் தோபே தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்திய அளவில் மராட்டியத்தில் தான் இந்த உயிர் கொல்லி நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகம்.

மும்பை பெருநகரில் 13 பேருக்கு பாதிப்பு

இதில், மும்பை பெருநகரில் (மும்பை, தானே, கல்யாண், நவிமும்பை) கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 9-ல் இருந்து 13 ஆக அதிகரித்து இருப்பது, இந்த பகுதி மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மும்பை பெருநகரப்பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கஸ்தூர்பா ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மும்பையில் உள்ள சுமார் 1,200 ராட்சத விளம்பர பலகைகளில் அடுத்த 10 நாட்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி முடிவு செய்து உள்ளது. மேலும் மாநகராட்சி விளம்பர பலகை உரிமம் பெற்றுள்ளோர் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி எச்சரித்து உள்ளது.

இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மராட்டிய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

Next Story