மாணவிக்கு பாலியல் தொந்தரவு: வேலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி நூலகர் பணியிடை நீக்கம்


மாணவிக்கு பாலியல் தொந்தரவு: வேலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி நூலகர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 17 March 2020 10:00 PM GMT (Updated: 17 March 2020 6:35 PM GMT)

வேலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நூலகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவரை கைது செய்யக்கோரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர், 

வேலூர் தொரப்பாடியில் தந்தை பெரியார் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இங்கு வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியின் நூலகராக தாமோதரன் (வயது 55) பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2-ம் ஆண்டு படிக்கும் மாணவியை நூலகத்தில் புத்தகங்கள் அடுக்கி வைக்க உதவிக்கு வரும்படி கூறி உள்ளார்.

அந்த மாணவி நூலகத்துக்குள் சென்றவுடன் தாமோதரன் கதவை பூட்டி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. அதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அங்கிருந்து வெளியேற முயன்றுள்ளார். அப்போது தாமோதரன், இதுகுறித்து வெளியே தெரிவிக்க கூடாது என்று மாணவியை மிரட்டி அனுப்பி உள்ளார்.

வகுப்பறைக்கு வந்த மாணவி நடந்த சம்பவத்தை சக மாணவிகளிடம் கூறி கதறி அழுதுள்ளார். அதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகள் இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டனர். ஆனால் நூலகர் மீது நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து மாணவர்கள் வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனாலும் நூலகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் நேற்று காலை கல்லூரியின் முன்பாக திரண்டனர்.

அவர்கள் தொரப்பாடி-பாகாயம் சாலையில் திடீரென அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பாகாயம் போலீசார் மறியலில் ஈடுபட்ட மாணவர்களை கல்லூரிக்குள் அழைத்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நூலகரை பணியிடை நீக்கம் செய்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் போலீசார், கல்லூரி நிர்வாகத்திடம் பேசினர்.

அதைத்தொடர்ந்து சிறிதுநேரத்தில் நூலகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக கல்லூரி தகவல் பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

ஆனால் நூலகரை கைது செய்ய வேண்டும் என்று மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுகையில், நூலகர் தாமோதரன் பல ஆண்டுகளாக நூலகத்தை தூய்மைப்படுத்த வேண்டும் என்று கூறி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து புகார் தெரிவித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சாலை மறியல் காரணமாக தற்போது நூலகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். போலீசார் அவரை கைது செய்யும்வரை எங்களின் உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தனர்.

இதற்கிடையே நூலகர் தாமோதரன் மீது கல்லூரி முதல்வர் அளித்த புகாரின் பேரில் மாலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story