வாடகை, குடிநீர் கட்டணம் பாக்கி: கூடலூரில் 16 கடைகளுக்கு சீல் நகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை


வாடகை, குடிநீர் கட்டணம் பாக்கி: கூடலூரில் 16 கடைகளுக்கு சீல் நகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 17 March 2020 11:30 PM GMT (Updated: 17 March 2020 8:54 PM GMT)

வாடகை, குடிநீர் கட்டணம் செலுத்தாததால் கூடலூரில் 16 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சி பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகளும், ஏராளமான வணிக நிறுவனங்களும் உள்ளன. இதுதவிர நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்களும் உள்ளன. இதில் 157 கடைகள் உள்ளது. நடப்பு ஆண்டுக்கான வரி பாக்கிகளை வசூலிக்கும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். இருப்பினும் வாடகை, குடிநீர் கட்டணம் பொதுமக்கள் தரப்பில் சரிவர செலுத்தப்படவில்லை. இதனால் ரூ.41 லட்சம் நிலுவை பாக்கியாக இருந்து வருகிறது. இதனால் வாடகை, குடிநீர் கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகம் பொதுமக்களை வலியுறுத்தி வந்தது.

இருப்பினும் பாக்கி தொகை வசூலாகாமல் இருந்து வந்தது. இதையொட்டி நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் நகராட்சி அதிகாரிகள் வாடகை மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள கடைகள் மற்றும் கட்டிடங்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

16 கடைகளுக்கு சீல்

கூடலூர் புதிய மற்றும் பழைய பஸ் நிலையம், காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் வாடகை தொகையை செலுத்தாத 16 கடைகளை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து 12 கட்டிடங்களுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இது குறித்து நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் கூறியதாவது:-

நகராட்சிக்கு சொந்தமாக 157 கடைகள் உள்ளது. ரூ.37 லட்சம் வாடகை தொகை வசூல் ஆகாமல் இருந்தது. சம்பந்தப்பட்ட வாடகைதாரர்களின் கவனத்துக்கு பலமுறை கொண்டு செல்லப்பட்டது. இருப்பினும் வாடகையை செலுத்த முன்வரவில்லை. இதனால் 16 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதேபோல் குடிநீர் கட்டணம் ரூ.10 லட்சம் வரை பாக்கி உள்ளது. இதனால் 12 கட்டிடங்களுக்கு செல்லும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2 நாட்களில் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் நிலுவை பாக்கியை சம்பந்தப்பட்டவர்கள் செலுத்த தொடங்கி உள்ளனர்.

கடும் நடவடிக்கை

கடைகளை பூட்டி சீல் வைத்த பிறகு ரூ.6 லட்சம் வசூலாகி உள்ளது. இனி வரும் நாட்களில் மீதமுள்ள தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நிலுவை தொகையை செலுத்த முன்வரவில்லை எனில் கடைகளுக்கு சீல் வைக்கும் பணி தொடரும். மேலும் குடிநீர் கட்டணம் செலுத்தாத கட்டிடங்களுக்கு குழாய் இணைப்பு துண்டிக்கப்படும். எனவே பொதுமக்கள், வியாபாரிகள் தங்களது நிலுவை பாக்கியை உடனடியாக நகராட்சி அலுவலகத்தில் செலுத்தி ரசீதுகளை பெற்று கொள்ள வேண்டும் என கேட்டு கொள்ளப்படுகிறது. தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story