‘கோவை நகைக்கடைகளில் கொள்ளையடிக்க திட்டமிட்டோம்’ ஆயுதங்களுடன் கைதான மதுரை கும்பல் வாக்குமூலம்


‘கோவை நகைக்கடைகளில் கொள்ளையடிக்க திட்டமிட்டோம்’ ஆயுதங்களுடன் கைதான மதுரை கும்பல் வாக்குமூலம்
x
தினத்தந்தி 17 March 2020 11:30 PM GMT (Updated: 17 March 2020 9:28 PM GMT)

நகைக்கடைகளில் கொள்ளையடிக்க திட்டமிட்டதாக ஆயுதங்களுடன் கைதான மதுரையை சேர்ந்தவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மதுரை,

கோவை நஞ்சுண்டாபுரம் ரோட்டில் போலீசார் நடத்திய வாகன சோதனையின்போது, காரில் பட்டாக் கத்தி, வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சிக்கிய மதுரை அவனியாபுரம் பழனிகுமார்(வயது40), சுரேஷ்குமார்(28), கார்த்திக்(35) உசிலம்பட்டியை சேர்ந்த வீர சுபாஷ்(30), திருமங்கலத்தை சேர்ந்த மனோபாலா(27), தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன் (27) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் மதுரை மாவட்டத்தில் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கைதான மதுரை மாவட்டத்ைத சேர்ந்தவர்கள் உள்பட 6 பேரும் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

கொள்ளையடிக்க திட்டம்

எங்களுடன் நண்பராக இருந்து தற்போது எங்களை விட்டு பிரிந்து சென்று எங்களை தீர்த்துக்கட்ட திட்டமிட்ட மதுரையை சேர்ந்த பிரபல ரவுடியான கல்யாண சுந்தரம் என்பவரை கொலை செய்ய திட்டம் தீட்டி இருந்தோம். சிறைக்கு சென்றால் குடும்ப செலவு, நீதிமன்ற செலவு, வக்கீல் செலவுகளுக்காக பணம் தயார் செய்து வைத்துக்கொள்ளலாம் என திட்டம் தீட்டினோம்.

இதற்காக கோவையில் உள்ள நகைக்கடைகளில் கொள்ளையடிக்கலாம் என்ற எண்ணத்தில் பயங்கர ஆயுதங்களுடன் நாங்கள் காரில் வந்தோம். ஆனால் போலீசின் பிடியில் சிக்கிக்கொண்டோம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

இவர்கள் கைதானது தொடர்பாக தற்போது கோவை ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைதான 6 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் கோவையில் ஏதாவது குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களா? என்பதை அறிய 6 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக கோவை கோர்ட்டில் போலீசார் மனுதாக்கல் செய்ய உள்ளனர்.

கமிஷனர் பாராட்டு

பயங்கர ஆயுதங்களுடன் வந்தவர்களை கைது செய்த ராமநாதபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெசிஸ் உதயராஜ், ஏட்டு செந்தில்குமார் மற்றும் போலீசாரை கமிஷனர் சுமித்சரண் பாராட்டினார்.

Next Story