திருப்பூர் மாவட்டத்தில் துப்புரவு தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - தேசிய மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் அறிவுரை


திருப்பூர் மாவட்டத்தில் துப்புரவு தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - தேசிய மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் அறிவுரை
x
தினத்தந்தி 17 March 2020 10:21 PM GMT (Updated: 17 March 2020 10:21 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் துப்புரவு தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தேசிய துப்புரவு மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் ஹிர்மானி அறிவுறுத்தியுள்ளார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் சமூக பொருளாதார நிலை, வாழ்வியல் சூழ்நிலை, கல்விநிலை தொடர்பாக அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்துக்கு தேசிய துப்புரவு மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் ஹிர்மானி தலைமை தாங்கி பேசியதாவது:-

உள்ளாட்சி அமைப்புகள் தங்களுக்கு கீழ் உள்ள உள்ளாட்சிகளில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் காப்பீட்டு திட்டத்தில் இணைந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

தனியார் நிறுவனங்கள், குடியிருப்புகளில் உள்ள கழிவுக்குழிகளை குறித்த காலத்துக்குள் நவீன எந்திரங்களை பயன்படுத்தி துப்புரவு செய்ய வேண்டும். மனித கழிவுகளை மனிதனே அள்ளுவதை தடை செய்தல் மற்றும் மறுவாழ்வு சட்ட நடைமுறைப்படுத்துதலை முறையாக கண்காணிக்க மாநகராட்சி ஆணையாளர், நகராட்சி ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள், பேரூராட்சியின் செயல் அதிகாரிகள் ஆகியோருக்கு தகுந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளன.

துப்புரவு தொழிலாளர்களின் நலனில் மிகுந்த அக்கறையுடன் இருந்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல், மாநகர போலீஸ் துணை கமிஷனர் பிரபாகரன், மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார், தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார், திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் சாகுல் அமீது, பாலசுப்பிரமணியன், சுப்பிரமணியன், ஆர்.டி.ஓ.க்கள் கவிதா, ரவிக்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி சேகர், அனைத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story