கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து சிதம்பரம் நகராட்சி பணியாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம்


கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து சிதம்பரம் நகராட்சி பணியாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 17 March 2020 11:00 PM GMT (Updated: 17 March 2020 10:39 PM GMT)

சிதம்பரத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து நகராட்சி பணியாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது.

சிதம்பரம்,

கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த கடலூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சிதம்பரம் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்பாக பணியாற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும், கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை மேற்கொள்வதோடு, பொதுமக்களுக்கு எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பது குறித்த முகாம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.

இதற்கு சிதம்பரம் நகராட்சி ஆணையாளர் சுரேந்திர‌ஷா தலைமை தாங்கினார். நகராட்சி பொறியாளர் மகாதேவன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் பால்டேவிட்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகக்கவசம்

மாவட்ட தொற்றுநோய் தடுப்பு அலுவலர் டாக்டர் மனோகரன், டாக்டர்கள் குணபாலன், மங்கையற்கரசி, சுகாதார மேற்பார்வையாளர் அரிகிரு‌‌ஷ்ணன், சுகாதார ஆய்வாளர் கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், வைரஸ் தடுப்புமுறை குறித்து பொதுமக்களுக்கு எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பது குறித்தும் விளக்கி பேசினார். அதைத்தொடர்ந்து நகராட்சி அலுவலர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு கை, கால்களை எவ்வாறு கழுவுவது, பொது இடங்களில் பாதுகாப்பு கவசம் அணிந்து பணியாற்றுவது குறித்து விளக்கப்பட்டது. முன்னதாக துப்புரவு மேற்பார்வையாளர், பணியாளர்களுக்கு முகக்கவசம் மற்றும் கை கழுவும் திரவம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் சுரேந்திர‌ஷா கூறுகையில், கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த சிதம்பரம் நகரில் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அதன்அடிப்படையில் சிதம்பரம் நகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடத்த உள்ளோம். எனவே பொதுமக்கள் பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது. தும்மக்கூடாது. கை, கால்களை கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்றார். இதில் நகராட்சி மருந்துக்கடை சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story