மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 March 2020 10:15 PM GMT (Updated: 18 March 2020 3:28 PM GMT)

செந்துறை அருகே வெள்ளாற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செந்துறை, 

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள தளவாய் பகுதியில் வெள்ளாறு ஓடுகிறது. இந்த வெள்ளாற்றில் அரசு மணல் குவாரி அமைக்க அரசு திட்டமிட்டு வருகிறது. அதன்படி தளவாய் கூடலூர் பகுதியில் உள்ள வெள்ளாற்றில் மணல் குவாரி அமைக்க இடத்தை தேர்வு செய்து கற்களை நட்டு வைத்துள்ளனர்.

இதை அறிந்த அப்பகுதி விவசாயிகள் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, குவாரி அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்திற்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அவர்கள் கூறுகையில், மணல் குவாரி அமைத்தால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதோடு விவசாயமும் பாதிக்கப்படும். ஏற்கனவே சிமெண்டு ஆலை சுரங்கங்களால் நிலத்தடி நீர் மட்டம் 300 அடிக்கு கீழே சென்று விட்டது. மணல் குவாரி அமைத்தால் மேலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து இப்பகுதி பாலை வனமாகிவிடும். ஆகையால் மணல் குவாரி அமைக்கும் அரசின் முடிவை கைவிட வேண்டும் என்றனர். பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு கலைந்து சென்றனர்.

Next Story