30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரே‌‌ஷன் கடைகளை அடைத்து பணியாளர்கள் போராட்டம்


30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரே‌‌ஷன் கடைகளை அடைத்து பணியாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 19 March 2020 12:00 AM GMT (Updated: 18 March 2020 7:09 PM GMT)

30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் ரே‌‌ஷன் கடைகளை அடைத்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுவினியோக பணிகள் பாதிக்கப்பட்டன.

திருவாரூர்,

நுகர்பொருள் வாணிபக கழக ஊழியர்களுக்கு இணையான ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணிவரன்முறை வழங்க வேண்டும். ரே‌‌ஷன் கடைகளுக்கு முழுமையாக பொருட்கள் வழங்க வேண்டும். பொருட்களை எடையிட்டு வழங்க வேண்டும் என்பது உள்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்தம் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக சிறை நிரப்பும் போராட்டத்தை கைவிட்டு ரே‌‌ஷன் கடையை அடைத்து வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

பொதுவினியோக பணிகள் பாதிப்பு

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு இடங்களில் ரே‌‌ஷன் கடைகளை அடைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுவினியோக பணிகள் பாதிக்கப்பட்டன.

இதுகுறித்து சங்கத்தினர் மாவட்ட தலைவர் குணசீலன் கூறுகையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சிறை நிரப்பும் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எங்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்டமாக போராட்டம் நடைபெறும் என கூறினார்.

Next Story