குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் தடையை மீறி முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் 300 பேர் மீது வழக்கு


குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் தடையை மீறி முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் 300 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 19 March 2020 12:00 AM GMT (Updated: 18 March 2020 10:48 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரத்தில் போலீஸ் தடையை மீறி முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுதொடர்பாக 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விழுப்புரம்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த சட்டங்களை உடனடியாக மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தியும், இந்த சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக முஸ்லிம்கள் திரண்டனர். உடனே விழுப்புரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் ஆகியோர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று சிறை நிரப்பும் போராட்டத்திற்கு அனுமதி கிடையாது என்று கூறினர். அப்படியானால் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி தரும்படி போராட்டக்குழுவினர் கேட்டனர். அதற்கும் போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் தடையை மீறி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மத்திய அரசை கண்டித்து

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் என்.இப்ராஹீம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஆவடி இப்ராஹீம் கண்டன உரையாற்றினார்.

இதில் மாவட்ட செயலாளர் முகம்மதுஇலியாஸ், பொருளாளர் அப்துல்ஹை, துணைத்தலைவர் முகம்மது இப்ராஹீம், துணை செயலாளர்கள் அப்துல்லத்தீப், அகமது ஷெரீப், தாரிக் உள்பட பலர் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். 2 மணி நேரமாக நடந்த இந்த போராட்டம் அதன் பிறகு முடிவுக்கு வந்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக போராட்டக்குழுவினர் 300 பேர் மீது விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story