திருப்பூர் மாநகராட்சியில் ரூ.1,331¾ கோடிக்கு பட்ஜெட் தாக்கல்


திருப்பூர் மாநகராட்சியில் ரூ.1,331¾ கோடிக்கு பட்ஜெட் தாக்கல்
x
தினத்தந்தி 18 March 2020 11:06 PM GMT (Updated: 18 March 2020 11:06 PM GMT)

திருப்பூர் மாநகராட்சியில் ரூ.1,331¾ கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

திருப்பூர்,

திருப்பூர் மாநகராட்சியின் 2020-2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யும் நிகழ்ச்சி நேற்று காலை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

உதவி ஆணையாளர்(கணக்கு) சந்தானநாராயணன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய, ஆணையாளர் சிவகுமார் பெற்றுக்கொண்டார். இதில் மாநகர பொறியாளர் ரவி, உதவி ஆணையாளர்(வருவாய்) தங்கவேல்ராஜன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பட்ஜெட்டை வெளியிட்டு மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாநகராட்சியின் வருவாய் வரவினமாக ரூ.601 கோடியே 69 லட்சத்து 70 ஆயிரமும், செலவினமாக ரூ.597 கோடியே 4 லட்சத்து 25 ஆயிரமும், உபரியாக ரூ.4 கோடியே 65 லட்சத்து 45 ஆயிரமும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குடிநீர் வடிகால் நிதி வரவினமாக ரூ.729 கோடியும், செலவினமாக ரூ.728 கோடியே 32 லட்சமும், உபரியாக ரூ.68 லட்சத்து 36 ஆயிரமும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கல்வி நிதியை பொறுத்தவரை வரவினமாக ரூ.6 கோடியே 44 லட்சத்து 81 ஆயிரமும், செலவினமாக ரூ.6 கோடியே 42 லட்சமும், உபரியாக ரூ.2 லட்சத்து 81 ஆயிரமும் இருக்கும். மொத்தத்தில் வரவினமாக ரூ.1,337 கோடியே 14 லட்சத்து 87 ஆயிரமும், செலவினமாக ரூ.1,331 கோடியே 78 லட்சத்து 25 ஆயிரமும், உபரியாக ரூ.5 கோடியே 36 லட்சத்து 62 ஆயிரமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நொய்யல் ஆறு, சங்கிலிப்பள்ளம், ஜம்மனை ஓடைகளை சுத்தம் செய்து மேம்பாடு செய்தல், நடைபாதை அமைத்தல், பூங்காக்கள் அமைத்தல் பணிகளும், பஸ் நிலையங்களை மேம்படுத்துதல் பணிகளும், தினசரி மார்க்கெட், பூ மார்க்கெட், மீன் மார்க்கெட், வாரசந்தை மேம்பாட்டு பணிகளும் நடந்து வருகிறது.

சாலை மேம்பாடு, கட்டுப்பாட்டு மையம் அமைத்தல், மழைநீர் வடிகால் அமைத்தல், தெருவிளக்கு, சூரியஒளி மின்சக்தி திட்டம், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 26 பணிகளில் 4 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 22 பணிகள் நடந்து வருகிறது.

அம்ரூத் திட்டத்தில் ரூ.1,063 கோடியே 51 லட்சம் மதிப்பில் பவானி ஆற்று நீரை ஆதாரமாக கொண்டு 4-வது புதிய குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு இதுவரை 20 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது. விரைவில் இந்த திட்டம் முடிக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்படும். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது தினமும் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியும்.

கோடையை சமாளிக்கும் வகையில் குடிநீர் ஆதாரம் உள்ளது. அதனால் திருப்பூர் மாநகராட்சி பகுதி மக்களுக்கு தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்க முடியும்.

பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக்கொடுக்கும் வகையில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த பணிகளை விரைந்து முடிக்க ஏற்பாடு நடக்கிறது. பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story