பஸ்களின் இயக்கத்தை பாதியாக குறைக்க நடவடிக்கை; கலெக்டர் தகவல்


பஸ்களின் இயக்கத்தை பாதியாக குறைக்க நடவடிக்கை; கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 20 March 2020 10:30 PM GMT (Updated: 20 March 2020 3:33 PM GMT)

வெளிமாநிலங்களில் இருந்து புதுக்கோட்டைக்கு வரும் பஸ்களின் இயக்கத்தை பாதியாக குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் காணொலிக்காட்சி மூலமாக நேற்று ஆலோசனை நடத்தினார்கள். இதில் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் உமா மகேஸ்வரி நிருபர்களிடம் கூறுகையில், வெளிமாநிலங்களில் இருந்து புதுக்கோட்டைக்கு வரும் பஸ்களின் இயக்கத்தை பாதியாக குறைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. தேவையற்ற பயணங்களை பொதுமக்கள் முற்றிலும் தவிர்த்திட தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் பொது மக்களுக்கு கைகழுவுவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஏதேனும் நோய் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையினை அணுகவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றார்.

Next Story