கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை விருதுநகர் பஸ் நிலையத்தில் கலெக்டர் நேரடி ஆய்வு; போக்குவரத்து பணியாளர்களுக்கு முக கவசம் வழங்கினார்


கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை விருதுநகர் பஸ் நிலையத்தில் கலெக்டர் நேரடி ஆய்வு; போக்குவரத்து பணியாளர்களுக்கு முக கவசம் வழங்கினார்
x
தினத்தந்தி 20 March 2020 10:30 PM GMT (Updated: 20 March 2020 10:46 PM GMT)

விருதுநகர் மாவட்டம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் கொேரானா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில் கலெக்டர் கண்ணன் விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டதோடு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு முக கவசம் வழங்கினார்.

விருதுநகர்,

மத்திய,மாநில அரசுகள் கொேரானா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ள நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. மாவட்டம் முழுவதும் கிராம பகுதி, நகர் பகுதிகளில் கலெக்டர் கண்ணன் நேரில் சென்று கண்காணித்து வருகிறார். மாவட்ட போலீஸ் நிர்வாகமும் கொேரானா விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நேற்று கலெக்டர் கண்ணன் விருதுநகர் பழைய பஸ்நிலையத்தில் நகரசபை நிர்வாகம் மேற்கொண்டு உள்ள தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்தார். ஆய்வுக்கு வந்த கலெக்டர் கண்ணன் முக கவசம் அணிந்தபடி வந்து இருந்தார். அவருடன் நகரசபை கமிஷனர் பார்த்தசாரதி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்திருந்தனர். பஸ்நிலையம் முழுவதும் ஆய்வு நடத்திய கலெக்டர், பஸ்நிலையத்தில் தொடர் இடைவெளியில் கிருமிநாசினி தெளிக்குமாறு நகரசபை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். கமிஷனர் பார்த்தசாரதி நகரசபை நிர்வாகம் மேற்கொண்டுள்ள தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை விவரித்து கூறினார்.

பழைய பஸ்நிலையத்தில் கை கழுவுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த நகரசபை நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் பணியமர்த்தப்பட்டு இருந்த ஊழியர்கள், பொதுமக்களிடம் கை கழுவுவதன் அவசியத்தை விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என அறிவுறுத்தினார்.

போக்குவரத்து கழக நிர்வாகத்தின் சார்பில் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு முக கவசங்களை கலெக்டர் வழங்கினார். மேலும் போக்குவரத்து கழக பஸ்களில் கிருமி நாசினி தொடர்ந்து தெளிக்க வேண்டும் என்றும் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

விருதுநகரில் போக்குவரத்து கழக பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை 40 சதவீதம் வரை குறைந்துள்ளது. கிராமப்புற பஸ்களிலும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. பயணிகள் கூட்டம் இல்லாததால் பஸ் நிலையத்தில் வழக்கத்தைவிட பஸ்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது.

Next Story