சேதுபாவாசத்திரம் அருகே கடலூர் கலெக்டர் வீட்டில் ரூ.20 லட்சம் நகைகள் கொள்ளை


சேதுபாவாசத்திரம் அருகே கடலூர் கலெக்டர் வீட்டில் ரூ.20 லட்சம் நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 22 March 2020 12:30 AM GMT (Updated: 21 March 2020 5:19 PM GMT)

சேதுபாவாசத்திரம் அருகே உள்ள கடலூர் மாவட்ட கலெக்டர் வீட்டில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள நாடியம் கிராமத்தை சேர்ந்தவர் அன்புச்செல்வன். கடலூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வரும் இவர், குடும்பத்தினருடன் கடலூரில் தங்கி உள்ளார். நாடியம் கிராமத்தில் உள்ள கலெக்டரின் வீட்டின் காவலுக்காக அதே ஊரை சேர்ந்த செல்வம் என்பவர் அங்கு தங்கி உள்ளார்.

நேற்று காலை செல்வம் தூக்கத்தில் இருந்து எழுந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள், அதனுடன் இணைக்கப்பட்டிருந்த கணினி ஆகியவை கழற்றப்பட்டு வீட்டின் பின் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் போடப்பட்டிருந்தது.

55 பவுன் நகைகள்

இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வம், இது குறித்து கலெக்டர் அன்புச்செல்வனுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன், சேதுபாவாசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் வீட்டுக்குள் சுவர் ஏறி குதித்து, பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து அதில் இருந்த 55 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

கண்காணிப்பு கேமராக்கள்

தஞ்சையில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கும் பணி நடந்தது. தடயவியல் நிபுணர்கள் துணை சூப்பிரண்டு கலை கண்ணகி தலைமையில் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

போலீசார் தங்களை கண்டுபிடிக்க கூடாது என்பதற்காக கொள்ளையர்கள் வீட்டில் பெருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கணினியை கழற்றி தண்ணீர் தொட்டியில் வீசி சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

வலைவீச்சு

இதுதொடர்பாக சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.கலெக்டர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story