மக்கள் ஊரடங்கையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இன்று அடைப்பு


மக்கள் ஊரடங்கையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இன்று அடைப்பு
x
தினத்தந்தி 22 March 2020 12:30 AM GMT (Updated: 21 March 2020 9:53 PM GMT)

மக்கள் ஊரடங்கையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இன்று அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் ஊரடங்குக்கு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்திருந்தார்.

பிரதமரின் வேண்டுகோளுக்கு மாநில அரசுகள், திரைப்பட நட்சத்திரங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் ஆதரவு கரம் நீட்டியுள்ளனர். அந்தவகையில், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை இன்று மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகள் அடைப்பு

இதுதொடர்பாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ்குமார், அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மக்கள் ஊரடங்கு தொடர்பாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கமிஷனர் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, தேவையான அறிவுறுத்தல்களை டாஸ்மாக் மேலாண்மை இயக்குனருக்கு பிறப்பிக்குமாறு அரசு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கமிஷனர், ‘எப்.எல்.-1’, ‘எப்.எல்.-11’ உரிமம் பெற்ற டாஸ்மாக் மது விற்பனை கடைகளை மூடுமாறு உத்தரவிட்டுள்ளார். எனவே அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்கள் டாஸ்மாக் மதுக்கடைகளை இன்று அடைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மது வாங்க கூட்டம்

டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு நேற்று பிற்பகலிலேயே வெளியானது. இதனால் மதுபிரியர்கள் நேற்று இரவு டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுத்தனர். பெரும்பாலான கடைகளில் இரவு நேரங்களில் அதிக கூட்டம் காணப்பட்டது.

இன்றைய தினத்துக்கு தேவையான மதுபானங்களை குடிமகன்கள் வாங்கி இருப்பு வைத்தனர். இந்த மாதம் 31-ந்தேதி வரையிலும் டாஸ்மாக் பார்களை மூடுவதற்கு அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story