திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கோரி ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் உள்ளிருப்பு போராட்டம்


திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கோரி ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 21 March 2020 11:00 PM GMT (Updated: 21 March 2020 10:11 PM GMT)

வெங்கத்தூர் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கோரி ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது வெங்கத்தூர் முதல்நிலை ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள 21 குக்கிராமங்களில் தினமும் 2 டன் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பைகள் கடந்த காலங்களில் கூவம் ஆற்றுப்படுகையில் கொட்டப்பட்டு வந்தது.

ஆனால் பொதுப்பணித்துறையினர் உத்தரவின்பேரில் அந்த பகுதியில் குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டு, ஊராட்சியில் ஊராட்சிக்கு சொந்தமான வார்டு எண் 15-ல் உள்ள புறம்போக்கு இடத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமைக்க நடவடிக்கை எடுத்து அங்கு குப்பைகளை கொட்ட முடிவு செய்யப்பட்டது.

உள்ளிருப்பு போராட்டம்

ஆனால் குப்பைகள் கொட்டப்படும் பகுதியில் உள்ள வார்டு எண் 15-ல் வெங்கத்தூர் கிராமம் மற்றும் காலனி பகுதி மக்கள் தங்கள் குடியிருப்புக்கு அருகில் திடக்கழிவு மேலாண்மை அமைத்து குப்பைகளை கொட்டினால் தங்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் எனக்கூறி குப்பைகளை கொட்ட கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால் அங்கு குப்பைகளை கொட்டுவது தற்செயலாக நிறுத்தப்பட்டது. இதனால் வெங்கத்தூர் ஊராட்சியில் குப்பைகளை கொட்ட இடமில்லாமல் குப்பைகள் தேங்கி நின்றது. இந்நிலையில் நேற்று வெங்கத்தூர் முதல்நிலை ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளே வெங்கத்தூர் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் சுனிதா பாலயோகி, மாவட்டக்குழு உறுப்பினர் தினேஷ் குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் நா.வெங்கடேசன், ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் மோகனசுந்தரம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சியில் குப்பையை கொட்ட இடம் இல்லாததால் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு அனுமதி அளிக்க கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை போராட்டம்

இதுபற்றி தகவல் அறிந்ததும் கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அவர்களிடம் பேச்சு வார்த்தையில் நடத்தி அங்கு குப்பையை கொட்டினர். இந்நிலையில் குப்பையை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து வெங்கத்தூர் ஊராட்சி உட்பட்ட 15-வது வார்டு பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் நேற்று மாலை திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் இது தொடர்பான மனுவை அங்கிருந்த அதிகாரியிடம் அளித்து விட்டு கலைந்து சென்றனர். 

Next Story