கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரெயில்கள் மூலம் சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் தொழிலாளர்கள்


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரெயில்கள் மூலம் சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 22 March 2020 12:02 AM GMT (Updated: 22 March 2020 12:02 AM GMT)

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மும்பையில் வசித்து வரும் வெளிமாநில தொழிலாளர்கள் ரெயில்கள் மூலம் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர்.

மும்பை,

நாட்டிலேயே மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மேலும் இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மும்பை பெருநகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 30-ஐ தாண்டி உள்ளது. இதனால் பொது மக்கள் இடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மும்பையில் 31-ந் தேதி வரை கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நடைபாதை கடைகளை மூடவும் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதனால் மும்பையில் வசித்து வரும் உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம் போன்ற வெளிமாநில தொழிலாளர்கள் அதிகளவில் வேலையிழந்து உள்ளனர். கொரோனா பீதி மற்றும் வேலையில்லாததால் அவர்கள் சொந்த ஊருக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர்.

வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு செல்ல படையெடுத்ததால் நேற்று மும்பை சி.எஸ்.எம்.டி மற்றும் எல்.டி.டி. ரெயில் முனையங்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. டிக்கெட் கவுண்ட்டர்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டு இருந்தனர். வெளிமாநில ரெயில்கள் செல்லும் பிளாட்பாரங்களிலும் பயணிகள் அதிகளவில் காணப்பட்டனர்.

இதுகுறித்து எல்.டி.டி. ரெயில் நிலையத்தில் சொந்த ஊருக்கு செல்ல இருந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த சோனு என்பவர் கூறுகையில், " கொரோனா வைரஸ் பயம் ஒருபுறம் இருந்தாலும், கடைகள் மூடப்பட்டதால் எங்களுக்கு வேலையும் இல்லை. அதனால் தான் மும்பை இயல்பு நிலைக்கு திரும்பும் வரை சொந்த ஊருக்கு செல்கிறேன்" என்றார்.


Next Story