அத்தியாவசிய பொருட்களை தவிர வணிகநோக்கில் இயங்கும் கடைகளை மூடவேண்டும் - ராணிப்பேட்டை கலெக்டர் உத்தரவு


அத்தியாவசிய பொருட்களை தவிர வணிகநோக்கில் இயங்கும் கடைகளை மூடவேண்டும் - ராணிப்பேட்டை கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 23 March 2020 10:30 PM GMT (Updated: 23 March 2020 5:15 PM GMT)

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகளை தவிர, வணிக நோக்கில் இயங்கும் அனைத்து கடைகளையும் மூடி வைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்காக மருந்து கடைகள், மளிகை கடைகள், பழக்கடைகள் மற்றும் காய்கறி கடைகள் ஆகியவற்றை மட்டும் திறக்கலாம். பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டும், பொதுமக்கள் நலன் கருதியும், வணிக நோக்கில் இயங்கும் பிற கடைகள் அனைத்தையும் மூடி வைக்க வியாபாரிகள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

மேலும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உள்ள வெளிநாடுகளில் இருந்தும், இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வந்துள்ள நபர்கள் ராணிப்பேட்டை மாவட்ட கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு கட்டுப்பாட்டு மையத்தின் தொலை பேசி 04172- 273188, 273166 ஆகிய எண்களில் தாமாக முன்வந்து தெரிவிக்க வேண்டும்.

அவ்வாறு தெரிவிக்கும் பட்சத்தில் அரசு மருத்துவர்களால் சிகிச்சை குறித்து ஆலோசனைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் பிறமாநிலங்களிலிருந்து அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை தவிர்த்து பிற வாகனங்கள் ராணிப்பேட்டை மாவட்ட எல்லையோர சோதனை சாவடிகள் வழியாக அனுமதிக்கப்படமாட்டாது .

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.


Next Story