கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி: போலீஸ் கட்டுப்பாட்டில் திருச்சி ஜங்‌‌ஷன் ரெயில் நிலையம்


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி: போலீஸ் கட்டுப்பாட்டில் திருச்சி ஜங்‌‌ஷன் ரெயில் நிலையம்
x
தினத்தந்தி 24 March 2020 12:00 AM GMT (Updated: 23 March 2020 5:33 PM GMT)

திருச்சி ஜங்‌‌ஷன் ரெயில் நிலையம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. நடைமேடைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

திருச்சி,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 64 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் பாசஞ்சர் ரெயில்கள் வருகிற 31-ந்தேதி வரை இயக்கப்படாது என்று தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. திருச்சி- சென்னை இடையே இயக்கப்பட்டு வந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்கள் திருச்சி ஜங்‌‌ஷன் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

ரெயில்கள் இயக்கப்படாததால் திருச்சி ஜங்‌‌ஷன் ரெயில் நிலையத்தின் இரண்டு பிரதான வாசல்களும் நேற்று முன்தினம் இரவே மூடப்பட்டு விட்டன. பயணச்சீட்டு முன்பதிவு மையம், முன்பதிவில்லா பயணச்சீட்டு வழங்குமிடம் ஆகியவையும் மூடப்பட்டு விட்டன. வருகிற 31-ந்தேதி வரை இந்த மையங்கள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நேற்று காலை முதல் ரெயில் நிலையத்தின் உள் பகுதி வரை டவுன் பஸ்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆட்டோ, கார், இருசக்கர வாகனங்கள் உள்பட எந்த ஒரு வாகனங்களையும் போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. பொதுமக்கள் நடைமேடைக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. இதன் மூலம் ஜங்‌‌ஷன் ரெயில் நிலையம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது.

பணத்தை திரும்ப பெற...

ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு விட்டதால் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்து விட்டு பணத்தை திரும்ப பெறுவதற்காக சில பயணிகள் நேற்று முன்பதிவு மையத்திற்கு வந்தனர். அவர்களை போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.

ரெயில் நிலையத்தின் முன்பகுதியில் ஒரு தகவல் பலகை வைக்கப்பட்டு உள்ளது. அதில், வருகிற 31-ந்தேதி வரை ரெயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டதால் முன்பதிவு செய்த பயணிகள் பயணச்சீட்டை ரத்து செய்து பணத்தை திரும்ப பெற நேரில் வரவேண்டியது இல்லை. பயண தேதியில் இருந்து 3 மாதங்கள் வரை எப்போது வேண்டுமானாலும் அவர்கள் பயணச்சீட்டிற்கான கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என எழுதி வைக்கப்பட்டு இருக்கிறது.

கிருமி நாசினி தெளிப்பு

ரெயில் நிலையத்தின் அனைத்து நடைமேடைகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ரெயில்வே சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக தினமும் இரண்டு முறை இதுபோன்ற பணிகள் நடப்பதாகவும் அவர்கள் கூறினார்கள்.

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நேற்று காலை 8 மணிக்கு மேல் பஸ்கள் ஓடத்தொடங்கின. ஆனாலும் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இல்லை. பஸ்களிலும் குறைந்த அளவிலான பயணிகளே பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story