ஷேர் ஆட்டோக்களை ஒருவழிப்பாதையில் இயக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


ஷேர் ஆட்டோக்களை ஒருவழிப்பாதையில் இயக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 23 March 2020 11:30 PM GMT (Updated: 23 March 2020 5:38 PM GMT)

ஷேர் ஆட்டோக்களை ஒருவழிப்பாதையில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர்,

வளர்ந்து வரும் பெரம்பலூர் நகரமானது போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியாக உள்ளது. குறிப்பாக, பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் பகுதியில் சீரான போக்குவரத்து என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. பிற மாவட்டத்தில் இல்லாத அளவுக்கு சிறிய மாவட்டமான பெரம்பலூரில் ஷேர் ஆட்டோக்கள் அதிகமாக இயக்கப்பட்டு வருகிறது. இதனால் வாகன நெரிசலால் பல மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பிப்பது தொடர்கதையாகி வருகிறது. 2011-16-ம் ஆண்டு வரை பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக இருந்த தரேஷ் அஹமது ஷேர் ஆட்டோக்கள் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையத்திற்கு ஒரு வழிப்பாதையாக பாலக் கரை, வெங்கடேசபுரம், ரோவர்வளைவு, சங்குப்பேட்டை வழியாக கடைவீதி, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, திருநகர் வழியாக இயக்க வேண்டும்.

புதிய பஸ் நிலையத்துக்கு...

இதேபோல் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்துக்கு ஒரு வழிப்பாதையாக மதரசா சாலை வழியாக காமராஜர் வளைவு சென்று, சங்குபேட்டை வழியாக ஷேர் ஆட்டோக்களை இயக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு பின்பற்றப் பட்டதால் போக்குவரத்து இடையூறு இல்லாமல் ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வந்தன. அந்த கலெக்டர் இடம் மாறிய பின்னர் இந்த உத்தரவை ஷேர் ஆட்டோ டிரைவர்கள் மதிப்பதில்லை. மீண்டும் அந்த உத்தரவை நடை முறைப்படுத்த தற்போதைய மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்து போலீசாரும் முன்வரவில்லை. இதனால் தற்போது ஷேர் ஆட்டோக்கள் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையத்திற்கு சங்குப்பேட்டை, காமராஜர் வளைவு வழியாக வந்து விடுகிறது. மேலும் அங்கிருந்து மதரசா சாலை வழியாக செல்லாமல் காமராஜர் வளைவுக்கு நேரிடையாக சென்று புதிய பஸ் நிலையத்துக்கு ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது.

உத்தரவிட வேண்டும்

மேலும் ஷேர் ஆட்டோக்கள் குறிப்பிட்ட நிறுத்தத்தில் நின்று செல்லாமல் எல்லா இடங்களிலும் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. சில நேரங்களில் சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் கையை தூக்கினால் போதும், அவர் அருகே ஆட்டோவை நிறுத்தி அதன் டிரைவர் எங்கே போகணும் என்று கேட்கிறார். எனவே மாவட்ட நிர்வாகம் ஷேர் ஆட்டோக்களை பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் சென்று வர ஒருவழிப்பாதையை பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story